வெளிநாடுகளில் தமிழ் கற்பிக்க..தமிழ் பரப்புரை கழகம் உருவாக்கத்துக்கு ரூ.1 கோடி ஒதுக்கீடு - தமிழக அரசு
சென்னை: தமிழ் பரப்புரை கழகம் உருவாக்கத்திற்கு 1 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அயல்நாடு மற்றும் வெளி மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கு தமிழ் கற்பிக்க தமிழ் பரப்புரை கழகம் உருவாக்கப்படும் என சட்டசபையில் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிவித்து இருந்தார்.
இந்த நிலையில்தான் தமிழ் பரப்புரை கழகம் உருவாக்கத்திற்கு 1 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது தமிழக அரசு. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கடந்த ஆண்டு அறிவிப்பு
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில்,கடந்த 31.8.2021 அன்று நடைபெற்ற தமிழ் வளர்ச்சித் துறையின் 2021-2022-ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின்போது தொழில் துறை அமைச்சரால் கீழ்க்காணும் அறிவிப்பு வெளியிடப்பட்டது :

94 நாடுகளில் தமிழர்கள்
உலகில் சுமார் 94 நாடுகளில் தமிழர்கள் வசிக்கின்றனர்.அந்நாடுகளில் அவர்கள் தமிழை அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு செல்வதில் சிக்கல்கள் உள்ளன.இதனால்,கற்பதற்கான வசதிகள் இல்லாமை,தமிழறிந்த ஆசிரியர்கள் இல்லாமை, தேவையான தமிழ்ப் பாடநூல்கள் இல்லாமை என இருக்கும் சிக்கல்களைக் களைய நடவடிக்கை எடுக்கப்படும்.

ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு
தமிழை வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் கற்பிக்கும் அமைப்புகளுக்கு நிதியுதவி வழங்குதல்,ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளித்தல்,பயிற்சி பெற்ற ஆசிரியர்களை அனுப்பி வைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தமிழ் மொழியை இரண்டாம் மற்றும் மூன்றாம் மொழிகளாக கற்பிக்க தமிழ் பரப்புரைக் கழகம் உருவாக்கப்படும்.அகரம் முதல் சிகரம் வரை எனப் பல படிநிலைகளாகப் பாடங்கள் கற்பிக்கப்பட்டுச் சான்றிதழ் தேர்வும் நடத்தப்படும். இதற்கென தொடர் செலவினமாக ரூபாய் 1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்",என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அயல்நாடு தமிழர்களுக்குத் தமிழ் கற்பிக்க...
இந்த நிலையில்,2021-2022-ஆம் ஆண்டிற்கான தமிழ் வளர்ச்சி மானியக் கோரிக்கையின்படி,அயல்நாடு மற்றும் வெளிமாநிலங்களில் வாழும் தமிழர்களுக்குத் தமிழ் கற்பிக்க தமிழ் இணையக் கல்விக் கழகம் மூலம் தமிழ் பரப்புரைக் கழகம் உருவாக்குவதற்கு தொடர் செலவினமாக ரூ.1 கோடி நிதி ஒப்பளிப்பு அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications