இந்த பக்கம் பரந்தூர்.. அங்கிட்டு ஆவடி வரை.. மெட்ரோ ரயில் நீட்டிப்பு! அரசாணை வெளியிட்டது தமிழக அரசு!
சென்னை: சென்னையில் மெட்ரோ ரயில் சேவையை பரந்தூர் வரை நீட்டிப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய ரூ.4.80 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 2ஆம் கட்ட திட்டத்தில் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலான 4வது வழித்தடத்தை பரந்தூர் வரை (43 கி.மீ) நீட்டிக்க திட்ட அறிக்கை தயாரிக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் விம்கோ நகர் - விமான நிலையம் வரை முதல் வழித்தடத்திலும், சென்ட்ரல் - பரங்கிமலை வரை இரண்டாவது வழித்தடத்திலும் தற்போது 54 கி.மீ தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த மெட்ரோ ரயில்களில் தினசரி 3 லட்சம் பேர் வரை பயணம் செய்து வருகின்றனர். விரைவான, பாதுகாப்பான, வசதியான பயணம் என்பதால் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் சென்னையில் தற்போது, 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதில், உயர்மட்ட பாதை பணி, தூண்கள் அமைக்கும் பணி கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில் கலங்கரை விளக்கம், அடையாறு, சேத்துப்பட்டு, மாதவரம் உள்ளிட்ட இடங்களில் சுரங்க ரயில் நிலையங்கள் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.
இந்நிலையில், மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து பூந்தமல்லி வழியாக பரந்தூரில் அமைய உள்ள புதிய விமான நிலையத்திற்கு நேரடி சேவையை வழங்க சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. மீனம்பாக்கம் முதல் பூந்தமல்லி வழியாக பரந்தூர் புதிய விமானம் நிலையம் வரை மொத்தம் 60 கிலோ மீட்டர் தொலைவிற்கு இந்த வழித்தடம் அமைய உள்ளது.
மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து ஒரு மணி நேரத்தில் பரந்தூரில் அமைய உள்ள புதிய விமான நிலையத்திற்கு செல்லும் வகையில் இந்த மெட்ரோ வழித்தடம் அமைக்கப்பட உள்ளது. பொதுவாக ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு ரயில் நிலையம் என்ற அடிப்படையில் மெட்ரோ வழித்தடம் உருவாக்கப்படும் நிலையில், இந்த புதிய வழித்தடத்தில் மக்கள் அதிகம் பயன்படுத்தாத இடங்களில் 4 கிலோ மீட்டருக்கு ஒரு ரயில் நிலையம் அமைக்கப்பட உள்ளது.
2 ஆம் கட்ட திட்டத்தில் வழித்தடத்தை நீட்டிக்க, நிதி ஒதுக்கீடு செய்யும்படி தமிழக அரசுக்கு சென்னை மெட்ரோ கோரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், மெட்ரோ ரயில் சேவையை பரந்தூர் வரை நீட்டிப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய ரூ.4.80 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 2-ஆம் கட்ட திட்டத்தில் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலான 4-வது வழித்தடத்தை பரந்தூர் வரை (43 கி.மீ.) நீட்டிக்க திட்ட அறிக்கை தயார் செய்ய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாதவரத்தில் இருந்து கோயம்பேடு வழியாக சோழிங்கநல்லூர் வரை செல்லும் 5வது வழித்தடத்தை ஆவடி வரை (16 கி.மீ) நீட்டிப்பது தொடர்பாக திட்ட அறிக்கை தயாரிக்கவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகளை 2028ஆம் ஆண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications