அரசு பள்ளி மாணவர்களே! எம்பிபிஎஸ் படிக்கணுமா?, ஐஐடி சேரணுமா?.. தமிழக அரசின் மாஸ் அறிவிப்பு
சென்னை: அரசு பள்ளி மாணவர்களுக்கு பள்ளி வேலை நாட்களின் போது மாலை வேளையில் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு நீட், ஜேஇஇ பயிற்சி அளிக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
மருத்துவ படிப்புக்கு நீட் எனும் நுழைவு தேர்வில் வெற்றியடைந்திருக்க வேண்டும். அது போல் ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய அரசு பல்கலைக்கழகங்களிலும், தனியார் பல்கலைக்கழகங்களிலும் பொறியியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வில் வெற்றி பெற ஜேஇஇ எனும் பயிற்சி தேவைப்படுகிறது.

பெரும்பாலான மாணவர்களுக்கு மருத்துவ கனவு என்பது நீட் தேர்வுக்கு பிறகு கானல் நீராகிவிட்டது. அந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. நீட் தேர்வுக்கென பயிற்சி மையங்கள் இந்தியா முழுவதும் முளைத்துள்ளன. இவைகளில் எல்லாம் பல லட்சங்களை செலவு செய்து படிக்க வேண்டிய சூழல் எழுந்துள்ளது.
இது போல் பல லட்சங்களை செலவு செய்வோர் நீட் தேர்வில் வெற்றி பெறுகிறார்கள், மருத்துவ படிப்பில் சேருகிறார்கள். ஆனால் தானாக படித்து நீட் தேர்வு எழுதும் மாணவர்களும் வெற்றியடைகிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. இந்த நீட் தேர்வால் பல அரசு பள்ளி மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள் என்பது குற்றச்சாட்டாக உள்ளது.

அரசுபள்ளி மாணவர்களுக்கும் நீட் தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. இவை வாரந்தோறும் அளிக்கப்படுகிறது. அந்த வகையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பள்ளி வேலை நாட்களில் வாரத்தில் 5 நாட்களும் நீட், ஜேஇஇ பயிற்சி அளிக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
மாலை 4 மணி முதல் 5.30 மணி வரை நீட் பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. திங்கள் முதல் வெள்ளி வரை இந்த பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு மட்டுமே பயிற்சி அளிக்கப்படும். யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications