ஸ்டாலின் பெயரை திட்டங்களுக்கு பயன்படுத்த தடை விதித்த ஐகோர்ட்.. உடனடியாக அப்பீல் செய்த தமிழக அரசு!
சென்னை: தமிழக அரசின் மக்கள் நலத் திட்டங்களில் ஸ்டாலின் பெயரை பயன்படுத்தக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை எம்.பியுமான சிவி சண்முகம். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில், தமிழ்நாடு அரசின் நலத் திட்டங்களில் முதலமைச்சர் ஸ்டாலினின் பெயரையோ, முன்னாள் முதலமைச்சர்கள் மற்றும் கட்சித் தலைவர்களின் புகைப்படங்களையோ பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று கோரி இருந்தார்.

ஐகோர்ட் தடை
இன்று மனு இன்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் நலத்திட்டங்களில் முதலமைச்சரின் பதவியையும், புகைப்படங்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், முதலமைச்சரின் தனிப்பட்ட பெயரை பயன்படுத்துவது தவறு.
அரசு திட்டங்களில் அரசியல் தலைவர்களின் பெயர்களை சூட்டுவதை அனுமதிக்க முடியாது. இதனால், தமிழக அரசு நலத்திட்டங்களில் முதலமைச்சரின் பெயரையோ, முன்னாள் முதலமைச்சர்கள் மற்றும் கட்சித் தலைவர்களின் புகைப்படங்களையோ, ஆளும் கட்சியின் சின்னம் அல்லது கொடியையோ பயன்படுத்தக் கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளது.
திட்டங்கள் கேள்விக்குறி
உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவைத் தொடர்ந்து தமிழக அரசின் திட்டங்களில் இடம்பெற்றுள்ள பெயர்கள் நீக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு உங்களுடன் ஸ்டாலின், மக்கள் நலன் காக்கும் ஸ்டாலின் என்று பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
இந்நிலையில், ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து தமிழக அரசின் பொதுத்துறை செயலர் ரீட்டா ஹரீஸ் தக்கார், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், "சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை அமல்படுத்தினால், ஒட்டுமொத்த திட்டத்தையே நிறுத்தி வைக்க வேண்டியிருக்கும். திட்டத்துக்காக செய்யப்பட்ட ஏற்பாடுகளை மாற்றியமைத்து மீண்டும் செய்ய வேண்டும். இதற்கு பல வாரங்கள் ஆகும். இதற்காக செய்யப்பட்ட ஏற்பாடுகள் வீணாகிவிடும். இந்த உத்தரவை அமல்படுத்துவது பெரும் கஷ்டத்தையும் பாரபட்சத்தையும் ஏற்படுத்தும். இதனால் மக்கள் நலன் பாதிக்கப்படும்.
தமிழக அரசு மேல்முறையீடு
மேலும் அந்த வழக்கு, நாளை துவங்கும் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்துக்கு பொருந்தாது. உங்களுடன் ஸ்டாலின் திட்டமும் கடந்த ஜூலை முதல் செயல்படுகிறது. இது இன்னும் சில வாரங்களில் முடிவுக்கு வரும். இந்தத் திட்டங்கள் செயல்பாட்டில் இருப்பதை விசாரணையின் போது மனுதாரர்கள் ஒப்புக் கொண்டனர். திட்டத்துக்கு பயன்படுத்தப்படும் அனைத்து பொருட்களும் முதல்வரின் பெயரை கொண்டு இருப்பதால், அதற்கு எதிராக அவர்கள் எந்த நேரடி நிவாரணத்தையும் கோரவில்லை.
எனவே ஐகோர்ட்டின் இந்த உத்தரவை மாற்றியமைப்பதுடன், உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின் ஆகிய திட்டங்களை தற்போதைய பெயரில் தொடர அனுமதிக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications