இருளர் பிள்ளைகளுக்கு அரசு செலவில் ஆட்டோ வசதி.. வியக்கவைத்த திராவிட மாடல்!
சென்னை: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளது காந்தி கிராமம். சென்னை டு திருப்பதி நெடுஞ்சாலையில் சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள எல்லப்ப நாயுடு ஊராட்சியில் இந்தக் கிராமம் அமைந்துள்ளது.
இந்தப் பகுதியில் அதிகமான இருளர் மக்கள் வசித்து வருகின்றனர். சுமார் 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இங்கே வசித்து வருகின்றனர்.

இவர்களின் பிள்ளைகள் சரியாகப் பள்ளிக்கு வருவதில்லை என்ற தகவல் தலைமையாசிரியர் மகேஷின் காதிற்கு எட்டி இருக்கிறது. உடனடியாக அவர் ஏன் குழந்தைகள் வருவதில்லை? அவர்களுக்கு என்ன பிரச்சினை? தொடர்ந்து இடைநிற்றல் ஏற்பட என்னக் காரணம் எனப் பல கோணங்களில் இறங்கி விசாரித்திருக்கிறார். 5 ஆம் வகுப்பு வரை காந்தி கிராமப் பகுதியில் உள்ள உள்ளூர் பள்ளியில் சரியாகப் படித்துக்கொண்டிருந்தது தெரியவந்தது.
ஆனால், அதே பிள்ளைகள் தோமூர் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு ஆறாம் வகுப்புக்கு மேல் படிப்பதற்காக வரும்போது இந்த இடைநிற்றல் விகிதம் அதிகமாகி இருக்கிறது என்பதைத் தலைமையாசிரியர் அவரது ஆய்வின் மூலம் அறிந்துள்ளார்.

அதற்குக் காரணம் சரியான போக்குவரத்து வசதி இல்லாததுதான் என்பதைக் கண்டறிந்துள்ளார். சரியான பேருந்து வசதி இல்லாததால், பிள்ளைகள் வயல்வெளிகளைக் கடந்து நடந்தே பள்ளிக்குத் தினம் 5 கிமீட்டர் வரை வந்துள்ளனர்.
மழைக்காலங்களில் இந்த வயல்வெளிப் பாதையில் மழை வெள்ளம் சூழ்ந்து கொள்வதால், மாணவர்கள் பள்ளிக்கு வருவது தடைப்படுகிறது என்பதையும் தலைமையாசிரியர் களப்பணி மூலம் உணர்ந்துள்ளார்.

போக்குவரத்து பிரச்சினைகளைக் காரணம் காட்டி எந்தக் குழந்தைகளுக்கும் கல்வி போய்ச் சேராமல் இருக்கக் கூடாது என்று உயர்கல்வி அதிகாரிகளுக்கு இந்தத் தகவலைத் தெரிவித்திருக்கிறார். அவர்கள் மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு இப்பிரச்சினையை முறையாகக் கொண்டு சென்றுள்ளனர்.

தலைமையாசிரியர் புகாரைக் கவனமாகக் கேட்டுக் கொண்ட ஆட்சியர், உடனடியாக அந்தக் குழந்தைகள் தொடர்ந்து படிப்பை மேற்கொள்ளத் தமிழ்நாடு அரசு செலவில் தினம் ஆட்டோவில் அழைத்துச் செல்ல உடனடியாக உத்தரவிட்டார். அதன்படி இப்போது குழந்தைகள் அரசு செலவிலேயே தினமும் தனியார் ஆட்டோவில் இன்பமாகப் பயணித்து தங்களின் படிப்பைத் தொடர்ந்துள்ளனர்.

இதன் மூலம் இருளர் இன மக்களின் 45 குழந்தைகளைத் தினமும் ஆட்டோவில் அழைத்துச் செல்லப்படுகின்றனர். மாலை அதேபோல் ஆட்டோவில் நிம்மதியாக வீடு வந்து சேர்கின்றனர்.
"இதுநாள் வரை கழனி வழிகளில்தான் நடந்தே பள்ளிக்குப் போய்வந்துகொண்டிருந்தோம். ஆனால், மழைக்காலத்தில் முட்டி அளவு வெள்ளம் சூழ்ந்துவிடும். ஆகவே வயல்களில் இறங்கி நடந்துபோவது கஷ்டமாக இருக்கும். அதேபோல் அணிந்து செல்லும் சீருடைகளும் சகதியில் நனைந்துவிடும். ஈர உடையோடுதான் பள்ளிக்குப் போவோம்.

அது மட்டுமல்ல; வயல்வெளிகளில் பாம்பு தொல்லைகள் அதிகம். அதற்குப் பயந்தே பல மாணவர்கள் பள்ளிக்கு வரமாட்டார்கள். அதனால் இடைநிற்றல் அதிகமானது. அதைத் தலைமையாசிரியர் உணர்ந்து எங்களுக்காக நடவடிக்கைகளை எடுத்தார்.
அரசு இப்போது எங்களுக்கு ஆட்டோ ஏற்பாடு செய்து தந்துள்ளது. எங்கள் கஷ்டத்தை உணர்ந்து அரசு உதவியுள்ளது. அதற்காக முதல்வர் ஸ்டாலின் அங்கிள், மாவட்ட ஆட்சியர், தலைமையாசிரியர் ஆகிய அனைவருக்கும் நன்றி" என்கிறார் மாணவி சாதனா.

"இந்தப் பள்ளியில் 256 மாணவ மாணவியர்கள் படித்துவருகிறார்கள். இந்தப் பள்ளியிலிருந்து 5 கிமீட்டர் தொலைவில் காந்திகிராமம் உள்ளது. அந்தப் பகுதியிலிருந்து 40க்கும் மேற்பட்ட பிள்ளைகள் இங்கே வந்து படித்துவிட்டுச் செல்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு முறையான போக்குவரத்து வசதியில்லாமல் கஷ்டப்படுக் கொண்டிருந்தனர். அதனால் பள்ளிக்கு வருவது தடைப்பட்டது.
"எங்கள் பிள்ளைகளின் சிரமங்களை உணர்ந்து, அவர்களின் கல்வி தடைப்படக்கூடாது என்பதற்காக ஆட்டோ வசதியைச் செய்து தந்துள்ளார் ஆட்சியர். அதற்கு முதல்வர் ஸ்டாலின் ஒப்புதல் அளித்துள்ளார்.

எல்லோரையும் போல எங்கள் பிள்ளைகளும் படிக்கவேண்டும், நல்ல நிலைக்கு வர வேண்டும் என்பதற்காக இந்த உதவியை அரசு செய்து தந்துள்ளது. அதற்காக நாங்கள் இந்த அரசுக்கு என்றும் நன்றிக்கடன் பட்டுள்ளோம்" என்கிறார் ஒரு பிள்ளையின் தந்தை ரமேஷ்.
இந்தக் குழந்தைகள் அத்தனை பேரும் இத்தனை ஆண்டுகளாக வயல்வெளியில் நடந்துசென்றுதான் படித்து வந்துள்ளனர். அந்தக் குறை இனிமேல் இல்லை. ஆட்டோ வசதியை ஏற்படுத்தித் தந்த பிறகுச் சரியான நேரத்தில் பிள்ளைகள் பள்ளிக்கு வருவதாக ஆசிரியை ஒருவர் கூறுகிறார். அதைப் போன்று இடைநிற்றல் பிரச்சினையால் வீட்டில் முடங்கிக் கிடந்த பிள்ளைகள் மீண்டும் பள்ளிக்குத் திரும்பி உள்ளதாகவும் அவர் தெரிவிக்கிறார்.

"ஆசிரியர்கள் என்னைச் சந்திக்கும்போது எல்லாம், 'ஏன் உங்கள் கிராமத்துக் குழந்தைகள் பள்ளிக்கு வரியாக வருவதில்லை?' என்று அடிக்கடிக் கேட்டுக் கொண்டிருப்பார்கள். நானும் எங்கள் பகுதியில் சரியான போக்குவரத்து வசதி இல்லாததைச் சுட்டிக்காட்டிச் சரியான காரணத்தை விளக்கிக் கொண்டிருந்தேன்.
அப்போதுதான் ஆட்டோ வசதி கேட்டு இருந்தேன். அதை உடனடியாக அரசின் கவனத்திற்கு அதிகாரிகள் கொண்டு சென்றனர். கல்வி தொடர்பாக எந்தக் குறை இருந்தாலும் அதை இந்த அரசு உடனடியாக செய்து தருகிறது. அதை நினைத்தால் பெருமையாக உள்ளது.

மற்றவர்களைப் போல் எங்கள் குழந்தைகளும் எதிர்காலத்தில் நல்ல நிலைக்கு வரவேண்டும் என்பதற்காக அரசு மேற்கொண்ட இந்த நடவடிக்கைக்கு எங்கள் கிராமத்து மக்கள் சார்பாக நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்" என்கிறார் ஒரு மாணவனின் தந்தை.
















Click it and Unblock the Notifications