ஆன்லைன் சூதாட்ட வழக்கு: ரூ 900 கோடி லாபம்! நீதிபதி சந்துரு அறிக்கையை சுட்டி காட்டி தமிழக அரசு வாதம்
சென்னை: ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் கடந்த ஆண்டு மட்டுமே ரூ 900 கோடியை லாபமாக பெற்றுள்ளன என தமிழக அரசு வாதத்தை முன் வைத்துள்ளது.
ஆன் லைன் சூதாட்டங்களுக்கு தடை சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில்
ஆன் லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில் முன் வைக்கப்பட்ட வாதங்கள்:

வெறும் யூகங்களின் அடிப்படையில், எந்த உண்மை தகவல்களும் இல்லாமல் இந்த தடை சட்டத்தை இயற்ற மாநில அரசுக்கு அதிகாரமில்லை என்பதால் இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
மொத்த தொகையில், ஆன் லைன் விளையாட்டு நிறுவனங்கள் 16 சதவீதம் மட்டுமே கட்டணமாக பெறுகின்றன. ஆன்லைன் நிறுவனங்களின் தொழில் செய்யும் உரிமையை பாதிக்கச் செய்யும் வகையில் உள்ள இந்த சட்டம், அரசியல் சட்டத்துக்கு விரோதமானது.
ஆன்லைன் விளையாட்டுகளின் தீமைகள் குறித்த எச்சரிக்கை அம்சங்களோடுதான் விளையாட்டுகள் வழங்கப்படுவதாகவும், அடிமை ஆவதை தடுப்பதற்கான சோதனைகள் உள்ளன. திறமையை நம்பி பந்தயம் வைத்து விளையாடும் விளையாட்டு, சூதாட்டமாகாது.
ஆன் லைன் விளையாட்டுக்களை முறைப்படுத்தலாமே தவிர, தடை விதிக்க முடியாது. ஒரே செயலை ஆன்லைனில் மேற்கொள்வது சட்டவிரோதம் எனவும், நேரில் மேற்கொள்வது சட்டப்படியானது எனவும் வகைப்படுத்த முடியாது.
தமிழக அரசு தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்கள்:
ரம்மி திறமைக்கான விளையாட்டாக இருந்தாலும், அதை அதிர்ஷ்டத்துக்கான விளையாட்டாக மாற்றும் சூழ்நிலைகளும் உள்ளதாகவும், பல தற்கொலை நிகழ்வுகளை தொடர்ந்தே இச்சட்டம் கொண்டு வரப்பட்டது.
ஆன் லைன் ரம்மிக்கு மட்டுமல்லாமல், அனைத்து ஆன் லைன் விளையாட்டுக்களுக்கும் தடை விதித்து சட்டம் இயற்றப்பட்டுள்ளதாகவும் இதற்கு முன் கொண்டு வரப்பட்ட சட்டத்தை எதிர்த்த வழக்கில், ஆன் லைன் விளையாட்டுக்களுக்கு தடை விதித்து மாநில அரசு சட்டம் இயற்றும் அதிகாரத்தை சென்னை உயர் நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது.
பொதுமக்களுக்கு அநீதி இழைக்கும் ஆன் லைன் விளையாட்டுக்களை தடை செய்ய அரசுக்கு அதிகாரம் உள்ளது. ஆன் லைன் விளையாட்டுக்களால், 76 சதவீத குழந்தைகள், கண்பார்வை பாதிப்பு, படிப்பு பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு வகைகளில் பாதிக்கப்படுகின்றனர்.
கடந்த ஆண்டு மட்டும் ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் 900 கோடி ரூபாய்க்கு மேல் லாபம் ஈட்டியுள்ளதாகவும் போனஸ் போன்ற கவர்ச்சி அறிவிப்புகளால் அடிமையாக்கி, சட்டம் ஒழுங்கு பிரச்னையை உருவாக்கி பொது ஒழுங்கை பாதிக்கச் செய்கிறது என, நீதிபதி சந்துரு அறிக்கை அளித்துள்ளார்.
ஆன் லைன் விளையாட்டு நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் செயல்படுவதால் அவற்றை கண்காணிக்க முடியாது; இந்நிறுவனங்களை ஒழுங்குபடுத்த இயலாது என்பதால் முழு தடை விதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications