போடு.. கிராமப்புற இளைஞர்களுக்கு செம கிஃப்ட்! 33 பொருட்கள் கொண்ட 'கலைஞர் கிட்'.. டெண்டர் கோரியது அரசு
சென்னை: கிராமப்புறங்களில் உள்ள விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் 33 விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய 'கலைஞர் கிட்' விரைவில் வழங்கப்பட உள்ளது. இதற்கான டெண்டரை கோரியுள்ளது தமிழக அரசு.
உதயநிதி ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரான பிறகு, அந்தத் துறை சார்பில் பல்வேறு அசத்தலான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டசபை கூட்டத் தொடரில் விளையாட்டுத் துறை மானியக் கோரிக்கையின் போது பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

அப்போது, கிராமப்புற இளைஞர்கள் விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள், ஆனால், பெரும்பாலானவர்களிடம் தேவையான விளையாட்டு உபகரணங்கள் இருப்பதில்லை. எனவே, முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் டாக்டர்.கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.42 கோடி செலவில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
அந்த அறிவிப்புக்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில், கிராம ஊராட்சிகளுக்கு 33 விளையாட்டு பொருட்கள் அடங்கிய கலைஞர் விளையாட்டு கிட்களை விரைவில் வழங்குவதற்கான ஏற்பாடுகள் அரசால் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இப்போது 33 விளையாட்டு உபகரணங்கள் கொண்ட ஸ்போர்ட்ஸ் கிட் தயாரித்து வழங்குவதற்கான டெண்டர் வெளியிடப்பட்டு உள்ளது.

ஒவ்வொரு கிட்டிலும்100 டி-ஷர்ட், 200 தொப்பிகள் உள்பட 33 விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய ஸ்போர்ட்ஸ் கிட்களை தயாரித்து வழங்குவதற்கான ஆன்லைன் டெண்டரை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி நவம்பர் 21 என்றும், அடுத்த நாள், ஒப்பந்தப் புள்ளி திறக்கப்படும் என்றும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஆய்வுக்குச் செல்லும்போது, மாணவர்கள், இளைஞர்கள் வைக்கும் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி வருகிறார். அந்தவகையில் ஏராளமான இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கியுள்ளார். இந்நிலையில், அனைத்து கிராம பஞ்சாயத்துகளுக்கும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது கிராமப்புற இளைஞர்களுக்கு உற்சாகம் கொடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications