எஸ்.சி, எஸ்.டி விவசாயிகள் மின் இணைப்பு பெற 90% மானியம் - அரசாணை வெளியீடு.. குட் நியூஸ் சொன்ன அரசு!
சென்னை : ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு, தட்கல் மின் இணைப்புத் திட்டத்தின் கீழ் மின் இணைப்பு பெற 90 சதவீதம் மானியம் வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், "விளிம்புநிலை மக்களுக்கான பொருளாதார முன்னேற்றமே அவர்களுக்கான சமூக நீதியாக அமையும் என்பதில் உறுதியான நம்பிக்கை உடைய தமிழக முதல்வர் அவர்களின் எண்ணத்திற்கு உரு கொடுக்கும் வகையில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சரால் 2022-2023-ஆம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையின் மீதான விவாதத்தின் போது கீழ்க்கண்ட அறிவிப்பு வெளியிடப்பட்டது.

விவசாயத்திற்கான இலவச மின் இணைப்புத் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் மூலம் வழங்கப்படும் துரித மின் இணைப்புத் திட்டத்தில் (Tatkal Scheme) செலுத்தப்பட வேண்டிய வைப்புத் தொகை குதிரைத் திறனுக்கேற்ப ரூ.2.50 லட்சம் முதல் ரூ.4.00 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிதியாண்டில் 1000 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு, தட்கல் மின் இணைப்புத் திட்டத்தின் கீழ் மின் இணைப்பு பெற 90 சதவீதம் மானியம் (ரூ.2.25 லட்சம் முதல் ரூ.3.60 லட்சம் வரை) வழங்கப்படும். இதனால் அரசிற்கு ஏற்படும் செலவு ரூ.23.37 கோடி ஆகும்.
ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சரின் 2022-2023-ஆம் ஆண்டிற்கான அறிவிப்பினை நடைமுறைப்படுத்தும் பொருட்டு 900 ஆதிதிராவிடர் விவசாயிகள் பயன்பெறும் வண்ணம் ரூ.21 கோடியே 03 லட்சத்து 97 ஆயிரத்து 500 மற்றும் 100 பழங்குடியின விவசாயிகள் பயன்பெறும் வகையில் 2 கோடியே 33 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய், 90 சதவீத மானியத் தொகையாக மொத்தம் ரூ.23 கோடியே 37 லட்சத்து 07 ஆயிரத்து 500 நிதி ஒப்பளிப்பு வழங்கி அரசாணை 29.08.2022 இல் வெளியிடப்பட்டுள்ளது." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications