அங்கீகாரமில்லாத வீட்டு மனை.. "இவங்களுக்கு" சிக்கல்.. கட்டுமான பணிகளுக்கும் "ஆப்பு"? தமிழக அரசு மாஸ்
சென்னை: அங்கீகாரமற்ற வீட்டு மனைகள் குறித்த அடுத்த சாட்டையை தமிழக அரசு சுழட்டி உள்ளது.. இதற்கான முக்கிய நடவடிக்கையையும் கையில் எடுத்துள்ளது.
மாநகராட்சிகளில் வீடு, கடை,திருமண மண்டபம் மற்றும் வணிகவளாகங்கள் கட்டுவோர் அதற்கு கட்டிட வரைபட அனுமதி பெறவேண்டும் என்பது அடிப்படை விதியாகும்.. வீடுகளைப் பொறுத்தவரை 4 ஆயிரம் சதுர அடி வரையிலான கட்டிடங்களுக்கு மாநகராட்சி கட்டிட அனுமதி வழங்குகிறது... அதற்கு மேலான கட்டிடங்களுக்கு, உள்ளூர் திட்டக்குழுமம் அனுமதி வழங்குகிறது.
இதில், விதி மீறல் கட்டிடங்கள், ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க உள்ளாட்சி அமைப்புகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது..

விதிமீறல்கள்: இதையடுத்து, மாநகராட்சி அனுமதி வழங்கிய கட்டிட வரைபடத்தின் அடிப்படையில்தான் இனி கட்டிடங்கள் கட்ட வேண்டும் என்றும், விதிமீறி கட்டப்படும் கட்டிடங்களை இடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அந்தக் கட்டிடத்துக்கு வரி நிர்ணயம் செய்யக்கூடாது, மின் இணைப்பு வழங்கக்கூடாது, குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை இணைப்பு வழங்கக்கூடாது என்றெல்லாம் ஏற்கனவே கடந்த காலங்களில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல, விதிமுறைகளை மீறி கட்டப்படும் அடுக்குமாடி கட்டிடங்களை தடுப்பதற்காகவே, அடுத்த நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.. அதன்படி, விதிமுறைகளை மீறி கட்டப்படும் அடுக்குமாடி கட்டிடங்களை அறிய, மாநகராட்சி கமிஷனர் தலைமையில் உயர்நிலை கண்காணிப்பு குழு ஒன்று பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ளது.
விதிமீறல்: தமிழகத்தில் விதிமீறல் கட்டிடங்களை தடுப்பதிலும், இது தொடர்பாக புகார்களை தந்தாலும்கூட, சம்பந்தப்பட்ட பிரிவின் சில அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுப்பதில்லையாம்.. பாதிக்கப்பட்ட புகார்தாரர்கள், ஹைகோர்ட்டை நாடி, உத்தரவு பெற்றால் மட்டுமே, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கிறார்களாம்.. அதனால்தான் இந்த கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அங்கீகாரமில்லாத மனைகள் புதிதாக உருவாவதை தடுப்பதற்காகவே, இன்னொரு அதிரடி கையில் எடுக்கப்பட்டுள்ளது.. அதாவது, செயற்கைக்கோள் அடிப்படையிலான புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்த, தமிழக அரசு இந்த நடவடிக்கை எடுத்து வருகிறது.
விற்பனை மனைகள்: தமிழகத்தில், நகர், ஊரமைப்பு சட்ட விதிகளை மீறி, அங்கீகாரமின்றி மனைப்பிரிவுகளை உருவாக்குவது தடை செய்யப்பட்டுள்ளது.. இத்தகைய மனைகளின் விற்பனையை பதிவு செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதில், 2016 அக்டோபர் 20க்கு முன் உருவான அங்கீகாரமில்லாத மனைப்பிரிவுகளை மட்டும் வரன்முறைப்படுத்த, தமிழக அரசு முடிவு செய்தது.
இதற்கான திட்டம், 2017ல் அறிவிக்கப்பட்டது. அதன்படி, கடந்த, 2019 நவம்பர் வரை, இந்த திட்டத்தில், சென்னையில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனைப்பிரிவுகளுக்கான வரன்முறை விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அதில், 90 சதவீத விண்ணப்பங்களுக்கு தொழில்நுட்ப அனுமதியும் தரப்பட்டுள்ளது.
மனைப்பிரிவுகள்: இதில், 2019 வரையிலான காலத்தில் வரன்முறைக்கு விண்ணப்பிக்க தவறிய மனைப்பிரிவுகளுக்கு கூடுதலாக ஒரு வாய்ப்பு வழங்க, அரசு தற்போது முடிவு செய்துள்ளது..
அதன்படி, அங்கீகாரமில்லாத மனைப்பிரிவுகள், மனைகளின் உரிமை யாளர்களுக்காக, 2024 பிப்ரவரி 29 வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதற்காகவே, பிரத்யேகமாக ஒரு வெப்சைட்டும் துவக்கப்பட்டு, ஆன்லைன் முறையில் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.. எனினும், வரன்முறைக்கு வராத மனைப்பிரிவுகளில் விற்பனையை முடக்க அரசு திட்டமிட்டுள்ளதாம்.
சபாஷ் முடிவு: செயற்கைக்கோள் உதவியுடன் அங்கீகாரமின்றி உருவான மனைப்பிரிவுகள் கண்டுபிடிக்கப்படுவதற்காகவே, 3.51 கோடி ரூபாயில் புதிய சாப்ட்வேர் தயாரிக்கப்பட்டுள்ளதாம்.. இதை பயன்படுத்திதான், அங்கீகாரமில்லாத மனைப்பிரிவுகளில் விற்பனை, கட்டுமான பணிகள் போன்றவற்றை முடக்க நடவடிக்கையும் எடுக்க போகிறார்களாம். இதனால் முறைகேடுகள் தவிர்க்கப்படும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications