ஆளுநர் போட்ட கமிட்டி.. பாய்ந்து வந்த அமைச்சர் பொன்முடி! “எல்லாம் புதுசாருக்கே”: தமிழக அரசு கொதிப்பு!
சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று நியமித்த துணைவேந்தர் தேர்வுக்குழுவிற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆளுநர் ரவி தன்னிச்சையாக செயல்பட்டு வெளியிட்ட அறிவிப்பை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் சென்னை பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் கல்வியியல் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் பணியிடங்கள் காலியாக உள்ளன. தேடல் குழு அமைக்கப்பட்டு, துணைவேந்தர் நியமிக்கப்படுவது வழக்கம். துணைவேந்தர் தேடுதல் குழுவில் யுஜிசி பிரதிநிதியை சேர்க்க வேண்டும் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நிபந்தனை விதித்திருந்தார்.

ஆளுநரின் இந்த நிபந்தனைக்கு விளக்கம் அளிக்கும் வகையில் தமிழக அரசு எழுதி இருந்த கடிதத்தில், யுஜிசி விதிகளின் படி, மாநில பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தரை நியமிக்க யுஜிசி விதிகளை மட்டும் பின்பற்றினால் போதுமானது. யுஜிசி சார்பில் உறுப்பினரை சேர்க்க வேண்டும் என்ற கட்டாய விதிமுறை இல்லை, பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் ஏற்கனவே உள்ள நடைமுறையை பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சென்னை பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் கல்வியியல் பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தர்களை தேர்வு செய்ய தலா ஒரு குழுவை அமைத்து ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். யுஜிசி சார்பில் உறுப்பினரை சேர்க்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்று தமிழக அரசு தெரிவித்திருந்த நிலையில் அதனை மீறி யுஜிசி சார்பில் உறுப்பினரை ஆளுநர் ரவி நியமித்துள்ளார்.

இந்நிலையில், ஆளுநர் ரவி நியமித்துள்ள துணைவேந்தர் தேர்வுக்குழுவிற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 3 பல்கலைக்கழக துணைவேந்தர்களை தேர்வு செய்ய ஆளுநர் ரவி அமைத்துள்ள தேடுதல் குழுவிற்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான ஆளுநர் ரவியின் நடவடிக்கையை, சட்ட ரீதியாக அணுக தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாட்டில் உயர்கல்வி துறையின் கீழ் 13 பல்கலைக்கழகங்கள் இயங்கி வருகின்றன. இந்தப் பல்கலைக்கழகங்களுக்கென தனித்தனியே சட்டம் மற்றும் விதிகள் உள்ளன. இவற்றின்படி துணைவேந்தரின் பதவிக்காலம் முடிந்தவுடன் அதனை நிரப்ப தேடுதல் குழு அமைக்கப்பட்டு அதன்மூலம் துணைவேந்தர் தேர்வு செய்யப்பட்டு நியமனம் செய்யப்படுவார். உயர்கல்வித் துறையின்கீழ் இயங்கும் பல்கலைக்கழக சட்டவிதிகளில், ஆளுநர், துணை வேந்தரை தேர்வு செய்யும் தேர்வுக்குழுவினை அமைக்க வழிமுறை இல்லை.

பாரதியார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பதவிக்காலம் 17.10.2022 அன்றும், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பதவிக்காலம் 30.11.2022 அன்றும் முடிவடைந்ததால், தேடுதல் குழு உறுப்பினர்கள் அந்தந்த பல்கலைக்கழகங்களின் விதிகளின்படி நியமனம் செய்யப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலோடு தமிழ்நாடு அரசிதழில் முறையே 20.09.2022 மற்றும் 19.10.2022 அன்று அறிவிக்கை வெளியிடப்பட்டது. இதுவரையில் எந்த ஒரு ஆளுநரும் தன்னிச்சையாக தேடுதல் குழுவினை அமைத்ததில்லை. அதற்கு விதிகளில் வழிவகையும் இல்லை. தேர்வுக்குழு குறித்த விவரங்களை அரசு தான் அரசிதழில் வெளியிடும்.
இதுநாள் வரையிலும் தேடுதல் குழு உறுப்பினர்கள் அந்தந்த பல்கலைக்கழக சட்டவிதிகளின்படி நியமிக்கப்பட்டு அரசாணை வெளியிட்டு, அரசிதழில் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் தற்போது ஆளுநர் நடைமுறையில் உள்ள பல்கலைக்கழக சட்ட விதிகளுக்கு எதிராக தேடுதல் குழுவை தன்னிச்சையாக முடிவு செய்து அறிவிக்கை வெளியிட்டுள்ளார். ஆளுநரால் அமைக்கப்பட்டுள்ள இந்த தேடுதல் குழு முழுக்க முழுக்க பல்கலைக்கழக சட்டம் மற்றும் விதிமுறைகளுக்கு மாறானது. அரசின் அலுவல் விதிகளின்படி அரசிதழில் அறிவிக்கை வெளியிடப்பட வேண்டும், ஆனால் ஆளுநர் தன்னிச்சையாக அறிவிக்கை வெளியிட்டது, மரபு மற்றும் விதிகளுக்கு முரணானது.

தெலுங்கானா மற்றும் குஜராத் மாநில பல்கலைக்கழகங்களில் உள்ளது போல் பல்கலைக்கழக துணைவேந்தரை தெரிவு செய்யும் அதிகாரம் அரசுக்கு அளிக்க வழிவகை செய்யும் சட்ட மசோதா சட்டமன்ற பேரவையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், இது நாள்வரையில் மசோதாவுக்கு ஆளுநரிடமிருந்து ஒப்புதல் பெறப்படவில்லை. ஆளுநர் தன்னிச்சையாக பாரதியார், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் மற்றும் சென்னை பல்கலைக்கழகங்களின் துணைவேந்தரை தெரிவு செய்வதற்கான தேடுதல் குழுவை அமைத்து வெளியிடப்பட்ட அறிக்கையினை அரசு சட்டப்படி எதிர்கொள்ளும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications