கொரோனா கட்டுப்பாட்டு பகுதியில் 10ஆம் வகுப்பு தேர்வு எப்படி நடத்துவீர்- ஹைகோர்ட் கேள்வி
சென்னை: சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் பத்தாம் வகுப்பு தேர்வை எப்படி நடத்துவீர்கள் என்று பள்ளிக்கல்வித் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு ஜூன் 15ம் தேதி முதல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பெற்றோர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்நிலையில், இந்திய மாணவர் பேரவை அமைப்பின் நிர்வாகி மாரியப்பன் மாணவரின் பெற்றோர் சேக் அப்துல்லா ஆகியோர் தொடர்ந்திருந்த வழக்கு நீதிபதிகள் எம்எம் சுந்தரேஷ், பிடி. ஆஷா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வுகள் ஜூலை மாதம் தான் நடைபெறுகிறது, கல்லூரிகளில் தேர்வுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
ஆனால் பத்தாம் வகுப்பு தேர்வு அவசரஅவசரமாக நடத்தப்படுவதாக குறிப்பிட்டார்.. கொரோனா கட்டுப்பாடு உள்ள பகுதிகளில் தேர்வு மையங்களை அமைக்க கூடாது என்று ஏற்கனவே மத்திய அரசு வழிமுறைகளை அறிவித்துள்ளதாகவும் ஆனால் தமிழக பள்ளிக்கல்வித்துறை நோய் கட்டுப்பாட்டு பகுதிகளிலும் தேர்வு மையங்களை அமைத்து தேர்வு நடத்த உள்ளதாக குறிப்பிட்டார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், சென்னையில் தொற்று பரவல் அதிகமாக உள்ள கட்டுப்பாட்டு பகுதிகளில் எப்படி தேர்வு மையங்களை அமைத்து தேர்வு நடத்தப் போகிறீர்கள், வெளியிலிருந்து எப்படி வர முடியும் என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முனுசாமி நோய் கட்டுப்பாடு உள்ள பகுதிகளில் உரிய பாதுகாப்புடன் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என்றும் குறிப்பிட்டார். ஏற்கனவே தொடரப்பட்ட வழக்குகள், 11- ம்தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து வழக்கு விசாரணையை நீதிபதி 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து பள்ளிக்கல்வித்துறை பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications