குடித்துவிட்டு வாகனம் ஓட்டுகிறார்கள்.. தமிழக அரசு தீர்வு காண வேண்டும்.. கே சி பழனிச்சாமி!
சென்னை: டாஸ்மாக்கை திமுக அரசு முறைப்படுத்த வேண்டும் என அதிமுக முன்னாள் எம்பி கே சி பழனிச்சாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கே சி பழனிச்சாமி வெளியிட்ட பதிவில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு வெளியே பொதுமக்கள் மது அருந்துவது பொதுவாக காட்சியாக மாறிவிட்டது! மதுக் கடைகள் மூடப்பட்ட நேரத்திற்குப் பிறகு டாஸ்மாக் பேனரின் கீழ் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
இதனால் குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் மற்றும் விபத்துகள் ஏற்படுகின்றன. சாலையோரத்தில் அதிகமாக மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தப்பட்டிருப்பதைக் கண்டால் அருகில் ஒரு டாஸ்மாக் கடை இருப்பதை நீங்கள் நிச்சயமாக உணர முடியும். எத்தனை பேர் குடிபோதையில் வாகனம் ஓட்டுகிறார்கள் என்பதையும் இது நமக்குச் சொல்கிறது.
தமிழக அரசாங்கம் இதற்குத் தீர்வு கண்டறிய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து கேசி பழனிச்சாமியிடம் தமிழ் ஒன் இந்தியா சார்பில் அணுகினோம். அப்போது கூறுகையில், சில இடங்களில் கம்பெனியிலிருந்தே நேரடியாக கடைகளுக்கு சப்ளை வருகிறது. இது அரசின் கலால் வரிக்குள் வருவதில்லை. இதனால் டாஸ்மாக் இருப்பிற்கும் வரிக்கும் இடையே முரண்பாடு ஏற்படுகிறது.
எடப்பாடி பழனிச்சாமி மருத்துவமனையில் அனுமதி.. எண்டோஸ்கோப்பி சிகிச்சை.. நலம்பெற தொண்டர்கள் வாழ்த்து
ஒருத்தரே நிறைய மதுபானங்களை வாங்கிக் கொள்வதால் (பல்க் பர்சேஸ்) மற்றவர்களுக்கு கிடைப்பதில்லை. இதனால் சில்லறை விலை கடைகளில் அதிக விலைக்கு மது விற்கிறார்கள். இது போல் டாஸ்மாக் பணி நேரம் முடிந்தும் இருக்கும் ஸ்டாக்குகளை அதிக விலைக்கு விற்பதால் நிறைய பேர் குடித்துவிட்டு வாகனம் ஓட்டி விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
குடித்துவிட்டு வாகனம் ஓட்டக் கூடாது என்பதற்காகத்தான் டாஸ்மாக்கிற்கு நேரம் நிர்ணயம் செய்யப்பட்டது. இதெல்லாம் பணம் பார்ப்பதற்காகவே இப்படி அத்துமீறி வியாபாரம் செய்கிறார்கள். மற்ற துறை ஊழல் குறித்து அதிமுகவும், திமுகவும் குறை சொல்லிக் கொள்ளும். ஆனால் டாஸ்மாக் துறை குறித்து இருவரும் வாய் திறக்க மாட்டார்கள். மதுவிலக்கு கொண்டு வருவோம் என்கிறார்கள். ஆனால் இது போன்ற சட்டவிரோதங்களை ஒழித்தால்தான் டாஸ்மாக்கை முறைப்படுத்த முடியும் என்றார் கே சி பழனிச்சாமி.