"தூய்மை பணியாளர்களுக்கு எதிராக அரசு செயல்படுவது போன்று போலி பிம்பம்".. சென்னை ஐகோர்ட்டில் விளக்கம்
சென்னை: தமிழக அரசு, தூய்மை பணியாளர்களுக்கு எதிராக செயல்படுவது போன்ற போலி பிம்பம் கட்டமைக்கப்படுவதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதம் வைத்துள்ளது.
சென்னை மாநகராட்சியின், 5-வது மற்றும் 6-வது மண்டலங்களில் தூய்மைப் பணிக்கான ரூ. 276 கோடிக்கான ஒப்பந்தத்தை தனியாருக்கு வழங்கியதை எதிர்த்து, தூய்மைப் பணியாளர்கள் சென்னை மாநகராட்சி அலுவலகம் ரிப்பன் மாளிகை முன்பாக கடந்த 12 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் கடந்த 12 நாட்களாக நீடித்து வரும் சூழலில் இந்த போராட்டம் காரணமாக பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக கூறி, வழக்கறிஞர் வினோத் நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தார். மனுத்தாக்கல் செய்தால் விசாரிக்கப்படும் என தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் தலைமை நீதிபதி அமர்வில் ஆஜராகி இருந்த வழக்கறிஞர் வினோத், மீண்டும் இன்று இந்த விவகாரம் தொடர்பாக முறையீடு செய்தார். அப்போது குறுக்கிட்ட தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், "தூய்மைப் பணியாளர்களுக்கு அரசு ஆதரவாக இருக்கிறது. தூய்மைப் பணியாளர்களுக்கு எதிராக அரசு செயல்படுவதை போன்ற போலி தோற்றம் ஏற்படுத்தப்படுகிறது." என விளக்கம் அளித்தார்.
அப்போது மனுவில் சில குறைபாடுகள் இருப்பதாக பதிவுத்துறை தெரிவித்ததை சுட்டிக்காட்டிய தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, குறைபாடுகளை நிவர்த்தி செய்து மனு தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என்றும் தினந்தோறும் முறையீடு செய்தால் மனு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட மாட்டாது எனவும் எச்சரித்தார்.
முன்னதாக, சென்னை மாநகராட்சியில், தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்குவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மாநகராட்சி நிர்வாகமும், தமிழக அரசும் புதன்கிழமை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவி்ட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications