நில ஒருங்கிணைப்பு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்.. விவசாயிகளுக்கு ஆபத்தா? இந்தச் சட்டம் எதற்காக?
சென்னை: தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார். ஆளுநர் ஒப்புதல் வழங்கிய நிலையில் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களை செயல்படுத்துவதற்காக நிலங்களை ஒருங்கிணைக்க வழிவகை செய்யும் வகையில் இச்சட்டம் உள்ளது.
கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஏப்ரல் 23ஆம் தேதி வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டத்தை அறிமுகப்படுத்தினார். குரல் வாக்கெடுப்பு மூலம் அன்றைய தினமே தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023 மசோதா நிறைவேற்றப்பட்டது. பின்னர் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதாவுக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

நில ஒருங்கிணைப்பு சட்டம்: மாநிலத்தில் உற்பத்தி, பொருளாதாரம் மேம்பாட்டுக்கான முக்கிய காரணியாக நிலம் உள்ளது. அரசு நிலங்களை ஒருங்கிணைத்தல், குத்தகை போன்றவற்றில் தற்போதுள்ள நடைமுறை இரு நூற்றாண்டுகளாக உள்ளது. அதனை கருத்தில் கொண்டு புதிய நில ஒருங்கிணைப்பு சட்டம் கொண்டு வரப்படுகிறது. நீர்நிலைகள், ஆறுகள், ஓடைகள் போன்றவை இயற்கை நிகழ்வுகளால் தனது பரப்பை விரிவாக்கிக்கொண்டே செல்வதால், அவை பாதுகாக்கப்பட வேண்டும் என இந்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
தனியாருக்கு சொந்தமான நிலத்தின் வழியாக தண்ணீர் அதன் போக்கை மாற்றிக்கொண்டால் நிலப்பரிமாற்றம் முறையை சட்டப்பூர்வமாக ஒழுங்குபடுத்துவதற்கும், 100 ஏக்கருக்கு குறையாத இடத்தில், நீர்நிலைகள் இருந்தால் அந்த இடத்தில் வணிகம், தொழில்துறை சார்ந்த திட்டடத்தை ஒருவர் செயல்படுத்த விரும்பினால் விண்ணப்பிக்கலாம் என்றும் அந்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
சட்டம் சொல்வது என்ன?: மாநிலத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த திட்டம் என கருதினால் அரசு நிபுணர் குழுவை அமைக்கும். 4 அரசு அதிகாரிகள், அரசால் பரிந்துரைக்கப்படும் சுற்றுச்சூழல் நிபுணர் குழு மக்களிடம் கருத்துக் கேட்கப்படும். கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தி, உள்ளீடுகளுடன் கூடிய வரைவு ஒன்றை மாவட்ட ஆட்சியரிடம் குழு சமர்ப்பிக்கும். மாவட்ட ஆட்சியர் இந்த வரவை மாவட்ட அரசிதழில் வெளிடுவார்.
யாருக்காவது மாற்றுக்கருத்து இருந்தால் 30 நாட்களுக்குள் ஆட்சியருக்கு தெரியப்படுத்தலாம். 30 நாட்களுக்கு பிறகு ஆட்சியர் அனைத்து உள்ளீடுகளுடன் கூடிய வரவை அரசுக்கு அனுப்பி வைப்பார். இதன்பின் மீண்டும் பரிசீலித்து 2 மாதங்களில் ஒப்புதல் அல்லது நிபந்தனையுடன் ஒப்புதல் வழங்கி அரசிதழில் வெளியிடப்படும் என இந்தச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் ஒப்புதல்: இந்நிலையில் தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு (சிறப்பு திட்டங்கள்) சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். மாநிலத்தில் முக்கியத்துவம் வாய்ந்த, பெரிய திட்டங்களுக்காக அரசு நிலங்களை ஒருங்கிணைப்பதற்கு இந்த மசோதா வழிவகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு மசோதா மூலம் நீர்நிலைகளை அரசு தனியாருக்கு தாரைவார்ப்பதாக அரசியல் தலைவர்கள் மற்றும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்த சட்டத்தினால் பயனடையப்போவது சிறு குறு முதலாளிகள் இல்லை. 100 ஹெக்டேர் என்றாலே அது நிச்சயம் கார்ப்ரேட் முதலாளிகளுக்காகத் தான் இருக்கும் என பலரும் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications