ஆயுத பூஜை : ‘ஒரே குடும்பமாக.. வெற்றி மேல் வெற்றி’ - ஆளுநர் ரவி, எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் வாழ்த்து!
சென்னை : ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகையையொட்டி தமிழக ஆளுநர் மற்றும் முக்கிய அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
நவராத்திரி எனப்படும் ஒன்பது திருநாட்களின் இறுதியில் ஒன்பதாவது நாளான ஆயுத பூஜை மற்றும் பத்தாவது நாளான விஜயதசமி திருநாள் இன்றும் நாளையும் கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மக்கள் அனைவரும் அன்பும் பாசமும் சகோதரத்துவமும் கொண்ட ஒரே குடும்பம் போல உற்சாகத்துடன் கொண்டாட வேண்டும் என வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதேபோல, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் ஆயுத பூஜை, விஜயதசமி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

ஒரே குடும்பம் போல
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி ஆகிய பண்டிகைகளை முன்னிட்டு, தமிழக மக்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் அன்பும் பாசமும் சகோதரத்துவமும் கொண்ட ஒரே குடும்பம் போல இந்த பண்டிகைகளை உற்சாகத்துடன் கொண்டாட வேண்டும்.

சரஸ்வதி தேவி
சரஸ்வதி தேவி தனது மெய்ஞானத்தால் அறியாமை என்ற இருளை அகற்றி, நமது மக்களுக்கு வளமையையும், மகிழ்ச்சியையும் கொண்டு வரட்டும். துர்கா தேவி, நம் மக்களை ஒரே குடும்பமாய் ஒன்றிணைத்து, அனைத்து தடைகளையும் தகர்த்து நமது தேசிய இலக்கை அடைவதற்கான வலிமையை நமக்கு வழங்கட்டும்" என்று தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "நவராத்திரி எனப்படும் ஒன்பது திருநாட்களின் இறுதியில் ஒன்பதாவது நாளான ஆயுத பூஜை மற்றும் பத்தாவது நாளான விஜயதசமி திருநாளை பக்தியுடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவருக்கும் உளங்கனிந்த ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். அழிவு இல்லாத சிறந்த கல்விச் செல்வத்தை வழங்குகின்ற கலைமகளையும், மனத் திட்பத்தோடு துணிவையும் தரும் மலைமகளையும்; செல்வங்களை அள்ளித் தரும் திருமகளையும் போற்றி வழிபடுவது நவராத்திரி பூஜையின் சிறப்பு அம்சமாகும்.

தீயவைகள் அகன்று
விஜயதசமி தினத்தன்று, கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவியையும், நம் தொழிலுக்கும், ஜீவனத்திற்கும் உதவி செய்யும் கருவிகளையும் தெய்வத்தின் திருவடிகளில் படைத்து வழிபடும் நாள் ஆயுத பூஜை திருநாள் ஆகும். ஊக்கமுடன் கூடிய உழைப்பே, வறுமையை அகற்றி, செல்வத்தைப் பெருக்கி, வாழ்வில் வளம் சேர்க்கும் என்பதை உணர்த்தும் திருநாளாக இந்தப் பண்டிகை விளங்குகிறது. அன்னை சாமுண்டீஸ்வரி மகிஷாசுரனை வதம் செய்த நாளான விஜயதசமி தினத்தன்று தீயவைகள் அகன்று நல்லவைகள் நடக்கட்டும்.

உலகிற்கெல்லாம் தாய்
தமிழக மக்கள் கல்வியிலும், செல்வத்திலும், துணிவிலும் சிறந்து விளங்கவும், அவர்களுடைய வாழ்வில் வெற்றிகள் குவியவும் அருள்புரியுமாறு, உலகிற்கெல்லாம் தாயாக விளங்கும் அன்னை பராசக்தியை போற்றி வணங்கி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது தூய வழியில், அனைவருக்கும் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

ஓபிஎஸ் வாழ்த்து
இது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "நவராத்திரி பண்டிகையை மகிழ்ச்சியோடு கொண்டாடி கொண்டிருக்கும் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். நவராத்திரி பண்டிகையின் முதல் 3 நாட்கள் துர்கா தேவியையும், அடுத்த 3 நாட்கள் லட்சுமி தேவியையும், இறுதி 3 நாட்கள் சரஸ்வதி தேவியையும் மக்கள் பக்தியுடன் வழிபடுவது வழக்கம்.

செய்யும் தொழிலே தெய்வம்
செய்யும் தொழிலே தெய்வம் என்பதற்கேற்ப தொழிலுக்கு ஆதரமாக விளங்கும் தொழிற் கருவிகளையும், இயந்திரங்களையும், பொருட்களையும், வாகனங்களையும் தூய்மைப்படுத்தி அவற்றை இறை பொருளாக கருதி வழிபடும் நன்னாள் ஆயுத பூஜை திருநாளாகும். 10-வது நாளான விஜயதசமி திருநாளன்று தொடங்கிடும் நற்காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் மக்கள் அன்னை அம்பிகையை வணங்கி கல்வி, கலை, தொழில் போன்றவற்றை தொடங்கி வெற்றி திருநாளான விஜயதசமி திருநாளை வெகுவிமர்சையாக கொண்டாடுவார்கள்.

வெற்றி மேல் வெற்றி
அன்னை மகாசக்தியின் அருளால் மக்கள் அனைவரும் வாழ்வில் வெற்றி மேல் வெற்றி பெற்று எல்லா நலங்களையும், வளங்களையும் பெற்று, பகையின்றி ஒற்றுமையோடு வாழ்ந்திட எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை மீண்டும் ஒரு முறை உரித்தாக்கி கொள்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications