ஒரே மர்மமா இருக்கே.. ஆளுநர் ரவி ஒரு நாள் முன்னாடியே சென்னை வந்துட்டாரே! மீண்டும் டெல்லிக்கு போறாராம்
சென்னை: டெல்லிக்கு 6 நாள் பயணமாக சென்றிருந்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பயணத்தை முடித்துக்கொண்டு நேற்றிரவு சென்னைக்கு திரும்பி இருக்கிறார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே தொடர்ந்து பல்வேறு விவகாரங்களில் மோதல் போக்கு தொடர்ந்து வந்தது. நீட் விலக்கு மசோதா, ஆன்லைன் ரம்மி மசோதா தொடங்கி, சட்டசபையில் ஆளுநர் உரையை மாற்றியது, அண்மையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை தகுதி நீக்கம் செய்தது வரை பல்வேறு விவகாரங்களிலும் இரு தரப்பு மோதல் நீடித்து வருகிறது.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தனது அதிகாரத்தை மீறி மாநில அரசின் செயல்பாடுகளில் தலையிடுவதாக தமிழ்நாடு அரசு தரப்பில் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. முதலமைச்சர் முக ஸ்டாலின், அமைச்சர்கள், கூட்டணி கட்சியினர் என பலரும் ஆளுநர் ரவியின் செயல்பாடுகள் மாநில சுயாட்சிக்கு எதிராக உள்ளதாக குற்றம்சாட்டி வருகிறார்கள்.
செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியை விட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி நீக்கியது அதிகார துஷ்பிரயோகம் என்றும் குற்றச்சாட்டுகளை திமுக தரப்பும், தமிழ்நாடு அரசும் முன்வைத்தது. இதனை தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்கிய தனது உத்தரவை ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்தி வைத்தார்.
இந்த நிலையில், அவர் கடந்த ஜூலை 7 ஆம் தேதி தலைநகர் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். மத்திய அரசிடம் கலந்து ஆலோசிக்காமல் செந்தில் பாலாஜியை ஆர்.என்.ரவி நீக்கியதாகவும் இதனால் அவர் மீது அதிருப்தியில் உள்ள டெல்லி, நேரில் வருமாறு அவருக்கு அழைப்பு விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் டெல்லிக்கு 6 நாள் பயணமாக சென்ற அவர், கடந்த சனிக்கிழமை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். அதில் தமிழ்நாட்டில் நிலவும் அரசியல் நிலவரம், சட்டம் ஒழுங்கு விவகாரம் குறித்து ஆலோசித்ததாக கூறப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு இல்லத்தில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரான அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கட்ரமணியை சந்தித்த ஆளுநர் ஆர்.என்.ரவி 2 மணி நேரத்துக்கும் மேலாக அவரிடம் ஆலோசனை மேற்கொண்டார். செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கியது தொடர்பாக வெங்கட்ரமணியிடம் அவர் அலோசித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜூலை 7 ஆம் தேதி முதல் ஜூலை 13 ஆம் தேதி வரை 6 நாட்கள் ஆர்.என்.ரவி டெல்லியில் தங்கி இருப்பார் என்று பயணம் திட்டமிடப்பட்டு இருந்த நிலையில் ஐந்தே நாட்களில் பயணத்தை முடித்துக்கொண்டு ஒரு நாள் முன்னதாகவே அவர் சென்னைக்கு திரும்பி இருக்கிறார். நேற்று இரவு அவர் விமானம் மூலம் சென்னை வந்து உள்ளார்.
ஆளுநர் ஆர்.என்.ரவி தனது டெல்லி பயணத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவில்லை. அடுத்த வாரம் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற உள்ள கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டுக்கு டெல்லி செல்வார் என்றும், அப்போது அவர் பிரதமர் மோடியை சந்திப்பார் எனவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications