இனி டியூஷன் வாத்தியார்களுக்கும் வருமானம்; சகஜநிலையில் கல்வித்துறை; ABCD படிக்கப் போகும் மழலைகள்..!
சென்னை: கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த நர்சரி பள்ளிகள், மழலையர் விளையாட்டுப் பள்ளிகள், டியூஷன் சென்டர்களை நவம்பர் 1-ம் தேதி முதல் திறந்துகொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
ஏற்கனவே 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை நவம்பர் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ள நிலையில், இன்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின் மூலம் பள்ளிக்கல்வித்துறை முழு சகஜ நிலைக்கு திரும்பியிருப்பதை உணர்த்துகிறது.
இதனிடையே பிளே ஸ்கூல்களை திறப்பதற்கு அரசு கிரீன் சிக்னல் கொடுத்திருப்பதால், வேலைக்கு செல்லும் இளம் பெற்றோர் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

கொரோனா
கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் பூட்டப்பட்ட பள்ளிகளை கொஞ்சம் கொஞ்சமாக தமிழக அரசு திறந்து வருகிறது. முதலில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், அடுத்ததாக நவம்பர் 1-ம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. எல்.கே.ஜி.,யு.கே.ஜி., மாணவர்களுக்கு வரும் ஜனவரி மாதம் தான் பள்ளிகள் திறக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில், அவர்களுக்கு நவம்பர் 1-ம் தேதி முதலே வகுப்புகளை தொடங்க அரசு அனுமதி அளித்துள்ளது.

பிளே ஸ்கூல்
இதுமட்டுமல்லாமல் கிட்ஸ் பிளே ஸ்கூல், அதாவது மழலையர் விளையாட்டுப் பள்ளிகளையும் திறக்க அனுமதி தரப்பட்டுள்ளது. இதன் மூலம் மழலை குழந்தைகளை வைத்துக் கொண்டு பணிக்குச் செல்ல சிரமப்பட்ட இளம் பெற்றோருக்கு ஒரு தீர்வு கிடைத்துள்ளது. ஆன்லைன் வகுப்புகளால் குழந்தைகள் கண் பாதிப்புகளுக்கு ஆளாவதாலும், நேரடி கற்றலில் கிடைக்கும் அனுபவம் ஆன்லைனில் கிடைக்காமல் இருந்ததாலும் இது தொடர்பாக அலசி ஆராய்ந்து இந்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

டியூஷன் மையம்
இதேபோல் டியூஷன் சென்டர்களை திறந்து கொள்ளவும் அரசு ஒப்புதல் தந்துள்ளது. இதனால் டியூஷன் கிளாஸ் மூலம் வாழ்வாதாரம் ஈட்டி வந்த ஆயிரக்கணக்கான பட்டதாரிகளும் பலன் அடைவர். கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக முற்றிலும் முடங்கிக் காணப்பட்ட பள்ளிக்கல்வித்துறை மீண்டும் தனது பழைய நிலைக்கு திரும்பி வருகிறது. பள்ளிகள் திறப்பது மேல்நிலை மற்றும் உயர்நிலை பள்ளி பொதுத்தேர்வு எழுதக் கூடிய மாணவர்களுக்கு கவலையை தந்தாலும், தத்தி தத்தி நடந்து 'அ' 'ஆ' படிக்கப் போகும் மழலைகளுக்கு புதிய நண்பர்களை காணவிருக்கிறோம் என்ற புத்துணர்வை அளித்துள்ளது.

கடும் நடவடிக்கை
இதனிடையே பள்ளிகளில் அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகள் முழுமையாக பின்பற்றப்படுகிறதா என்பதை தீவிரமாக கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசு அறிவுறுத்தல் படி செயல்படாத பள்ளிகள் மீது பாரபட்சமற்ற முறையில் நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் காத்திருப்பது கவனத்தில் கொள்ள வேண்டியது. இதனால் கறிக்கோழிகளை அடைத்து வைப்பது போல் மாணவர்களை அடைத்து வைத்து கட்டணத்தை கறந்துவிடலாம் என எண்ணாமல் அவர்களுக்கு உரிய காற்றோட்ட வசதி, வளாகத் தூய்மை உள்ளிட்டவைகளை பள்ளி நிர்வாகங்கள் செய்து கொடுக்க வேண்டும் என்பது பெற்றோர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.












Click it and Unblock the Notifications