நூற்றாண்டுவிழா கண்ட இடதுசாரி தலைவர் என். சங்கரய்யாவுக்கு தமிழக அரசின் முதலாவது தகைசால் தமிழர் விருது
சென்னை: நூற்றாண்டு விழா கொண்டாடி இருக்கும் முதுபெரும் இடதுசாரித் தலைவரும் சுதந்திர போராட்ட வீரருமான என். சங்கரய்யாவுக்கு தமிழக அரசின் முதலாவது "தகைசால் தமிழர்" விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாட்டுக்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் தகைசால் தமிழர் என்ற பெயரில் புதிய விருதை உருவாக்கவும் இந்த விருதுக்கான விருதாளரைத் தேர்வு செய்ய ஒரு குழுவை அமைத்திடவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டிருந்தார்.

இவ்விருதுக்கான விருதாளரைத் தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் கலந்தாலோசனைக் கூட்டம் சென்னை, தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில், இளம் வயதிலேயே பொதுவாழ்க்கையில் ஈடுபட்டு, மாணவத் தலைவராகவும் சுதந்திரப் போராளியாகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் அரும்பணியாற்றியதுடன், தமிழ்நாட்டுக்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றி சமீபத்தில் 100 வயதை அடைந்த தமிழர், மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என். சங்கரய்யா அவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் தகைசால் தமிழர் விருதுக்கு அவரது பெயர் பரிசீலிக்கப்பட்டு அவருக்கு இவ்விருதினை வழங்க முடிவு செய்யப்பட்டது.
தகைசால் தமிழர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட என். சங்கரய்யாவுக்கு 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையும் பாராட்டு சான்றிதழும் வரும் ஆகஸ்ட் 15-ல் நடைபெறும் சுதந்திர தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலினால் வழங்கப்படும். இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது,












Click it and Unblock the Notifications