தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிக்க நேர கட்டுப்பாடு விதித்தது யார்? தமிழக அரசு விளக்கம்!
சென்னை: தீபாவளி பண்டிகைக்கு தமிழகத்தில் மட்டும் காலை ஒரு மணி நேரம், மாலை ஒரு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அரசு அனுமதி வழங்கியுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. இது தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டுமே இப்படி கால நிர்ணயம் செய்வதாக வதந்தி பரப்பி வருகிறார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை வரும் 20 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்தில் தீபாவளியன்று பட்டாசு வெடிக்க காலை மற்றும் இரவு நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. தீபாவளி நாளில் காலை 6 முதல் 7 மணி வரை, இரவு, 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு மட்டுமே இதுபோன்ற கால நிர்ணயம் செய்துள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. தலைநகர் டெல்லியில் பட்டாசு வெடிக்க 4 நாட்கள் உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. அதே நேரத்தில் தமிழகத்தில் தீபாவளி நாளில் மட்டும் காலை 1 மணி நேரம், மாலை ஒரு மணி நேரம் என மொத்தம் 2 மணி நேரம் அனுமதி வழங்கி இருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது.
இது பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடும் பெற்றோர் மற்றும் குழந்தைகளின் மகிழ்ச்சிக்கு இடையூறு ஏற்படுத்துவதாக உள்ளது என விமர்சனங்கள் எழுந்துள்ளன. பண்டிகை நாளில் இந்த நேரத்தில் வெடிக்கக் கூடாது என்று தேவையற்ற கட்டுப்பாடுகளை திணிப்பது சரியல்ல எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இதுதொடர்பாக தமிழக அரசின் அதிகாரப்பூர்வ உண்மை சரிபார்க்கும் தளமான தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டு உள்ளதாவது:
இது முற்றிலும் தவறான தகவல். உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அரசு 2018 ஆம் ஆண்டில் இருந்து தீபாவளி பண்டிகையன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து அனுமதி வழங்கி வருகிறது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பு நாடு முழுவதுக்கும் பொருந்தக்கூடியது. தமிழ்நாட்டில் மட்டுமே இப்படி கால நிர்ணயம் செய்வதாக வதந்தி பரப்பி வருகிறார்கள்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications