சூரப்பா விவகாரம்.. தமிழக ஆளுநர்தான் முடிவெடுக்க வேண்டும்: ஹைகோர்ட்டில் தமிழக அரசு
சென்னை: அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா விவகாரத்தில் பல்கலைக் கழக வேந்தரான ஆளுநர் தான் முடிவெடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா, முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறி, அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் குழுவை நியமித்து முந்தைய அதிமுக அரசு உத்தரவிட்டது. இந்த ஆணையத்தின் விசாரணையை எதிர்த்து சூரப்பா தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், விசாரணை அறிக்கை அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்க தடை விதித்து கடந்த பிப்ரவரியில் உத்தரவிட்டிருந்தது.

கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, நீதிமன்ற உத்தரவின்படி, நீதிபதி கலையரசன் ஆணைய அறிக்கை மூடி முத்திரையிடப்பட்ட உறையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி பார்த்திபன் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், பல்கலைக்கழக வேந்தர் என்ற முறையில், சூரப்பா விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து தமிழக ஆளுநர் தான் முடிவெடுக்க வேண்டும்; அதற்காக ஆணைய அறிக்கை, ஆளுநருக்கு அனுப்ப உள்ளதாகவும் தெரிவித்தார். இதையடுத்து, வழக்கின் விசாரணையை ஜனவரி 3 ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.












Click it and Unblock the Notifications