TNPSC பதவி உயர்வில் சமூக நீதி.. ஓய்வு பெற்ற நீதியரசர் தலைமையில் குழு அமைத்தது தமிழ்நாடு அரசு!
சென்னை: உச்ச நீதிமன்ற தீர்ப்பினால் அரசுப் பணியாளர் தரவரிசைப் பட்டியல் மற்றும் பதவி உயர்வுகளில் சமூகநீதிக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யவும், அதற்கான சட்ட ரீதியான தீர்வுகள் அளித்திடவும் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் அக்பர் தலைமையில் குழு அமைத்து அரசாணை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.
பணி மூப்பு மற்றும் மதிப்பெண் அடிப்படையில் பதவி உயர்வு வழங்குவது தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பு ஒன்று, அரசுப் பணியாளர் பதவி உயர்வு முறையில் சமூக நீதியின் தாக்கம் குறித்து சில கேள்விகளை எழுப்பியது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு முறையில் தரவரிசை பட்டியல் சமூகநீதி அடிப்படையில் இருந்து வந்த நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் காரணமாக ஏற்பட்டுள்ள மாற்றம், வருங்காலத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்கும், சட்ட ரீதியான தீர்வுகள் அளித்திடவும் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் G.M.அக்பர் தலைமையில் குழு அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
அதனை செயல்படுத்தும் வகையில் ஓய்வு பெற்ற நீதியரசர் தலைமையில் குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சென்னையை தலைமை இடமாகக் கொண்டு இந்த குழு செயல்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவிற்கு உதவி செய்ய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தக் குழுவின் முதன்மையான நோக்கம், உச்ச நீதிமன்ற தீர்ப்பினால் ஏற்பட்ட மாற்றங்கள், அவை வருங்காலத்தில் சமூக நீதி அடிப்படையிலான பதவி உயர்வுகளில் ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகள் ஆகியவற்றை விரிவாக ஆய்வு செய்வதாகும். மேலும், இந்த பாதிப்புகளை சரிசெய்யவும், சமூக நீதியைப் பாதுகாக்கவும் தேவையான சட்ட ரீதியிலான தீர்வுகள் மற்றும் பரிந்துரைகளை இந்தக் குழு அரசுக்குச் சமர்ப்பிக்கும்.
மேலும், இந்தக் குழு சட்ட ரீதியிலான தீர்வுகள் மற்றும் பரிந்துரைகளை ஆராய்ந்து மூன்று மாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications