ஏஆர் ரகுமான் கச்சேரி கற்றுத்தந்த பாடம்.. ஈசிஆரில் புதிய மாநாட்டு மையமா? அலார்ட் ஆகுமா தமிழக அரசு?
சென்னை: சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் ஏஆர் ரகுமான் நடத்திய இசை சச்சேரியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் சென்னைக்கு பெரிய பாடத்தை கற்றுக்கொடுத்துள்ளது. இந்த சூழலில் ஈசிஆரில் பெரிய மாநாட்டு மையத்தை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதால் அதற்கு பொதுப்போக்குவரத்தில் மிகப்பெரிய மாற்றம் செய்ய வேண்டியது அவசியம் ஆகும்.
சென்னையில் ஏஆர் ரகுமான் நேற்று இசை சக்சேரி நடத்தினார்.மறக்குமா நெஞ்சம் என்ற பெயரில் நடத்திய இந்த இசைக்கச்சேரியில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டது. ஒரு பக்கம் நிகழ்ச்சியிலேயே பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டது. மறுபக்கம் இசை கச்சேரியில் பங்கேற்க வந்தவர்களால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

இசை நிகழ்ச்சியை பார்க்க போனவர்கள் நிகழ்ச்சியில் போதிய ஏற்பாடுகள் இல்லாத காரணத்தாலும்,முறையான திட்டமிடல் இல்லாத காரணத்தாலும் பெரிய குழப்பத்தையும் வேதனையும் சந்தித்தனர். மறுபக்கம் வீடு திரும்ப முடியாத அளவிற்கு போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதிப்படவும் செய்தனர். அவர்கள் மட்டுமல்ல, பொதுமக்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தத்தளித்தனர்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையை பொறுத்தவரை சென்னையின் மிக குறுகிய நான்கு வழிச்சாலை என்று சொல்லலாம்.இன்னமும் முழுமையாக நான்கு வழிச்சாலை ஆகவில்லை. சாலையின் அகலம் மிக குறைவு. ஆனால் பக்கத்தில் உள்ள ஓம்ஆர் சாலை பெரிய நான்கு வழிச்சாலை தான். ஆனால் மெட்ரோ பணிகள் நடப்பதால் சோழிங்கநல்லூர் வரை ஏற்கனவே சொல்லவே முடியாத அளவிற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
அடையாறு முதல் சோழிங்க நல்லூர் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். ஓம்ஆர் சாலையில் தான் சென்னையின் ஐடி காரிடர் பகுதிகள் ஆகும். அங்குதான் பல்வேறு ஐடி நிறுவனங்கள் உள்ளன. இங்கு உள்ள நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் செல்லவே இந்த சாலை போதவில்லை. அவ்வளவு மோசமான நெரிசல் ஏற்படும். குறிப்பாக திருவான்மியூர் டைட்டில் பார்க் பகுதியில் உச்சகட்ட நெரிசல் ஏற்படும்.
இப்படியான நிலையில் நேற்று ஈசிஆரில் ஏஆர் ரகுமான் கச்சேரியால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதை முன்பே அறிந்த சென்னை போலீஸ், வாகனங்களை ஓம்ஆர் சாலையில் செல்ல அறிவுறுத்தியது. இதனால் தென் சென்னை மொத்தமும் ஸ்தபித்து போனது. ஒரே நேரத்தில் 49000 பேர் அங்கு நிகழ்ச்சியை பார்க்க ஏற்பாடு செய்துள்ளார்கள்.49000 பேரில் பாதிபேரில் காரில் வந்திருந்தால் கூட 25000 கார்களை வந்திருக்கும். இது தவிர வழக்கமான போக்குவரத்தும் இருக்கும். எனவே ஒரே நேரத்தில் பல்லாயிரம் வாகனங்களை சென்னை ஈசிஆர் சாலை தாங்காது. ஏன் ஓஎம்ஆர் சாலை (மெட்ரோ பணி காரணம்) கூட தாங்காது.
பொதுவாக ஞாயிற்றுக்கிழமை அன்று ஈசிஆர் மற்றும் ஓஎம்ஆர் சாலைகளில் பெரிய போக்குவரத்து நெரிசல் இருக்காது.வாகன போக்குவரத்து எளிதாக இருக்கும். அந்த நாளிலேயே இவ்வளவு போக்குவரத்து நெரிசல் என்றால், திங்கள் அல்லது வெள்ளி என மற்ற நாட்களில் நிகழ்ச்சியை வைத்திருந்தால், சென்னையில் என்னமாதிரியான நெரிகல் ஆயிருக்கும் என்பதை கற்பனை கூட செய்யமுடியாது.
இப்படியான சூழலில் ஒரு பெரிய மாநாட்டு மையத்தை சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினையொட்டி அவரது பெயரில் 30 ஏக்கரில் பன்னாட்டு அரங்கம் ('கலைஞர் Convention Centre') அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
கிழக்கு கடற்கரை சாலையில், மத்தியஅரசின் கலைபண்பாட்டு கூடமான தக்ஷின் சித்ராவை அடுத்து, சுற்றுலாத்துறைக்கு சொந்த 30 ஏக்கர் நிலப்பரப்பில் உலக தரத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா மாநாட்டு மையம் கட்டப்பட உள்ளது. இந்நிலையில் பொது மாநாட்டு மையத்தை அமைத்தால், பொது போக்குவரத்தில் ஏதாவது பெரிய மாற்றத்தை கண்டிப்பாக செய்ய வேண்டும். சிறுசேரியில் இருந்து பக்கிங்ஹாம் கால்வாயின் குறுக்கே மெட்ரோவை நீட்டிக்க வேண்டும். கிழக்கு கடற்கரை சாலையில் கலாச்சார மையத்தை அமைக்கும் முன்பு அதனால் ஏற்பட போகும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வை ஏற்படுத்திவிட்டு தான் ஆரம்பிக்க வேண்டும் என்கிறார்கள்.
கலைஞர் நூற்றாண்டு விழா மாநாட்டு மையம் கட்டப்பட உள்ள இடத்திற்கு மெட்ரோ ரயில் உள்பட பல்வேறு வசதிகள் கொண்டு வரவும், அனைத்து வசதிகளுடன், ஓட்டல் மற்றும் பெரிய இருக்கை வசதி கொண்ட மாநாட்டு விழா மண்டம் அமைப்பது குறித்தும் தமிழக பொதுப்பணித்துறை ஆய்வுகளை தொடங்கி உள்ளது. மேலும் மாநாட்டு மண்டபத்தை வடிவமைக்கும் பணியையும் தொடங்கி இருக்கிறது.
கலைஞர் நூற்றாண்டு விழா மாநாட்டு மையம் (Convention Centre) சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் 5 ஆயிரம் நபர்கள் அமரக்கூடிய வகையில் அமையப்போகிறதாம். மேலும் இந்த மையத்தில், கண்காட்சி அரங்கங்கள், நட்சத்திரத் தரத்திலான தங்கும் விடுதிகள், உணவகங்கள், ஊடக அரங்கங்கள், பூங்காக்கள், பன்னடுக்கு வாகன நிறுத்தம் ஆகியவை சர்வதேச தரத்தில் அமைக்கப்பட உள்ளதாம்.












Click it and Unblock the Notifications