மகப்பேறு விடுப்பு கொடுப்பதில்... எந்த பாரபட்சமும் இல்லை... உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி..!
சென்னை: பெண் அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு கொடுப்பதில் எந்த பாரபட்சமும் காட்டப்படுவதில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மகப்பேறு விடுப்பில் பாகுபாடு உள்ளதாக கூறி வழக்கறிஞர் ராஜகுரு என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கு மீதான விசாரணை இன்று நடைபெற்ற நிலையில் தமிழக அரசு இந்த பதிலை அளித்துள்ளது.
இந்த விழக்கின் முழு விவரம் பின்வருமாறு;
தமிழகத்தில் மணமான பெண் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு, 180 நாட்களில் இருந்து 270 நாட்களாக அதிகரித்து, 2016ம் ஆண்டு பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அரசாணை பிறப்பித்தது. இந்த சலுகை, பணி வரன்முறைப்படுத்தப்படாத, தற்காலிக பணியாளர்களுக்கும் நீட்டித்து 2020ம் ஆண்டு உத்தரவிடப்பட்டது.
ஆனால், இந்த அரசாணைகள் அமல்படுத்தப்படவில்லை எனக் கூறி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜகுரு, உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அவர் தனது மனுவில், மாநிலத்தில் பல மாவட்டங்களில் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும், பணி வரன்முறைபடுத்தப்படாத, தற்காலிக பெண் பணியாளர்கள், மகப்பேறு விடுப்பு வழங்கக் கோரிய விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளதாகவும்,அத்தகைய தற்காலிக பணியாளர்களுக்கும் மகப்பேறு விடுப்பை ஊதியத்துடன் வழங்க உத்தரவிட வேண்டும் எனவும், அரசாணையை முறையாக அமல்படுத்த உத்தரவிட வேண்டுமெனவும் கோரியிருந்தார்
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்த போது,அரசு தரப்பில் ஆஜரான அரசு பீளிடர் முத்துகுமார், மகப்பேறு விடுப்பு வழங்குவதில் வரன்முறை செய்யப்பட்ட ஊழியர்களுக்கும், வரன்முறைப்படுத்தப்படாத ஊழியர்களுக்கும் இடையே பாரபட்சம் ஏதும் காட்டுவதில்லை எனவும்,வரன்முறைப்படுத்தப்படாத ஊழியர்களும் பணியில் சேர்ந்து ஓராண்டு முடிந்திருந்தால் விடுப்பை பெற்றுக்கொள்ளலாம் எனவும் கூறினார். மேலும்
மகப்பேறு விடுப்பை 270 நாட்களில் இருந்து 365 நாட்களாக அதிகரித்து கடந்த ஆகஸ்ட் 23 ம் தேதி அரசாணை பிறப்பிக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அரசு தரப்பு வாதத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.