பற்றி எரியும் 3 பிரச்சினைகள்? ஹரியானாவில் வீசும் பாஜக எதிர்ப்பு அலை! நடுக்கத்தில் அமித்ஷா
சென்னை: ஹரியானாவில் பாஜக ஆட்சிக்கு எதிராக அலை வீசி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆகவே, அமித்ஷா தனது பிரச்சார திட்டத்தைக் காரணங்கள் கூறாமல் ரத்து செய்தும் இருக்கிறார்.
ஒரு முறை 'கால் வைக்கும் இடத்தில் எல்லாம் கண்ணிவெடி வைத்தார்கள்' என்று நடிகர் வடிவேலு நகைச்சுவையாகக் கூறியிருந்தார். அந்த நிலைதான் பாஜகவுக்கு இந்த மக்களவைத் தேர்தலில் ஏற்பட்டுள்ளது.

கடந்த 7 ஆம் தேதி ஹரியான சுயேச்சை எம்.எல்.ஏக்கள் 3 பேர் பாஜகவுக்கு அளித்து வந்த ஆதரவைத் திரும்பப் பெற்றனர். அடுத்த நொடியே காங்கிரஸ் கட்சிக்கு தங்களது ஆதரவைத் தரப் போவதாக அறிவித்தனர்.
இதுதான் பாஜகவுக்கு எதிரான ஹரியானா மக்களின் மனநிலையைப் படம்பிடித்துக் காட்டிய நிகழ்வு. நீருக்குள் நெருப்பாக இருந்த பாஜக மீதான கோபம் பட்டவர்த்தனமாக இந்த 3 பேரால் வெளிச்சத்திற்கு வந்தது.
அந்த ஊரில் உள்ள ஓம் பிரகாஷ் என்ற வாக்காளர் 'வயர்' தளத்திற்குப் பேட்டி அளிக்கையில் ஒரு தகவலை அழுத்தமாகக் கூறியிருக்கிறார். 'எனது பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் போட்டியிடுகிறார். எனக்குக் காங்கிரசைப் பிடிக்காது. ஆனால், இந்த முறை அவருக்குத்தான் ஓட்டுப் போடப் போகிறேன். காரணம், பாஜக.
எங்கள் மாநிலத்தில் விவசாயிகள் போராட்டத்தில் இறங்கிய போது பாஜக அரசு அவர்களுக்கு ஆதரவாக இருக்கவில்லை. விலைவாசி உயர்வு விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. மாநிலத்தில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. இதற்கு எல்லாம் காரணம், பாஜக" என்று பொங்கி எழுது பேசி இருக்கிறார்.

இவர் சொல்தை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது பிரச்சார பயணத்தை 2 முறை ரத்து செய்துள்ளார். அந்தளவுக்கு பாஜகவுக்கு எதிராக மக்களின் மனநிலை உள்ளதை அவர் உணர்ந்ததால்தான் இது நடந்துள்ளது.
அம்மாநிலத்தில் பாஜகவுக்கு எதிரான அலையே வீசி வருகிறது. அதற்கான காரணங்களாக விலைவாசி உயர்வு, வேலையின்மை, விவசாயிகள் போராட்டம் மற்றும் அக்னிபாத் திட்டம் ஆகியவை முன்வைக்கப்படுகின்றன.
இந்த அக்னிபாத் திட்டத்தைக் காங்கிரஸ் ரத்து செய்யும் என வாக்குறுதி அளித்துள்ளது. ஆகவே, ஹரியான அலை காங்கிரசுக்குச் சாதகமாக வீசத் தொடங்கிவிட்டது.
பதவியை ராஜினாமா செய்துள்ள 3 எம்.எல்.ஏக்களும் மூன்று வகுப்பைச் சேர்ந்தவர்கள். ஒருவர் ஜாட் சமூகத்தின் பிரதிநிதி. இன்னொருவர் கோண்ட் பிரதிநிதி. மூன்றாவது நபர் ரோர்.

சமூக வேறுவேறுகாக இருந்தாலும் பாஜக எதிர்ப்பில் இந்த மூவரும் ஒரே அணிக்குள் வந்துள்ளனர். இவர்கள் தங்கள் பகுதி மக்களின் வலியுறுத்தலை ஏற்றே பதவியை ஆதரவை விளக்கிக் கொண்டதாகச் சொல்லி இருக்கிறார்கள்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு 58% பேர் வாக்களித்திருந்தனர். இங்கே உள்ள ஜாட் சமூகத்தினர் பாஜகவுக்கு எதிரானவர்கள் என்று நம்பப்பட்டாலும் கடந்த முறை ஜாட் ஓட்டுகள் அதிகம் பாஜகவுக்கே சென்றது.
அதாவது பாதிக்குப் பாதி என்ற அளவில். ஆனால் இந்த முறை அது நடக்காது என்கிறார்கள்.
ஹரியானாவில் பாஜகவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி பற்றி பீட்டர் அல்போன்ஸ், "பாஜகவுக்கு எந்தளவுக்கு எதிர்ப்பு அலை உள்ளது என்பதை நம்மால் உணர முடிகிறது. அமித்ஷா இரண்டாவது முறையாக ஹரியானா நிகழ்ச்சியை ரத்து செய்துள்ளார். இரண்டு பொதுக்கூட்ட நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கடந்த தேர்தலில் வடகிழக்கு மாநிலங்களுக்கு அடிக்கடி சென்று வந்த பிரதமர் மோடி, இந்த முறை ஒருமுறைகூட போகவில்லை. போக முடியாத சூழல் அங்கே நிலவுகிறது. பீகாரில் பிரதமர் மோடியுடன் நிதிஷ்குமார் பிரச்சாரத்திற்குப் போகாமல் ஒதுங்கிக் கொண்டுள்ளார். இது குறித்து செய்திகள் வெளிவந்துள்ளன. இதுதான் அங்கே நிலைமையாக உள்ளது.

உபியில் பாஜக வெற்றி பெற வேண்டும் என நினைத்தவர்களே, அந்த என் டிஏ கூட்டணியை ஆதரித்தவர்களே இப்போது மனம் மாறி ராகுல் மற்றும் அகிலேஷ் யாதவ் கூட்டணியை ஆதரிக்கும் சூழல் உண்டாகி உள்ளது. குறைந்தது 15 தொகுதிகளைக் காங்கிரஸ் கூட்டணிக்கு இந்த வாக்காளர்கள் தருவதற்காகச் சூழல் நிலவுவதாகச் சொல்லப்படுகிறது.
இதே நிலைதான் மகாராஷ்டிராவிலும் நடந்துவருகிறது. அங்கே சிவசேனாவையும் தேசியவாத காங்கிரஸ் கட்சியையும் பாஜக அவமானப்படுத்திவிட்டது. மண்ணின் மைந்தர்களை அசிங்கப்படுத்திவிட்டது என்று மிகப்பெரிய கொந்தளிப்பு நிலவி வருவதைப் பார்க்கிறோம்.
நட்டாவே, ராஜஸ்தானின் சில இடங்களில் போட்டி கடுமையாக இருக்கிறது என்று வெளிப்படையாகச் சொல்கிறார். இமாச்சல் பிரதேசத்தில் 6 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துவிட்டனர். அவர்களுக்கு பாஜக சீட்டு கொடுத்துள்ளது. அதனால் கட்சிக்குள்ளாகவே மிகப்பெரிய எதிர்ப்பு எழுந்துள்ளது.
30% பாஜக வேட்பாளர்கள் இப்படி கட்சி மாறிவந்தவர்கள் என்று ஒரு புள்ளிவிவரம் கிடைத்துள்ளது. இதைப் போன்றவர்களைப் பிடித்துக் கொண்டுவந்துதான் வேட்பாளர்களாகி இருக்கிறார்கள்.
ஒடிசாவில் இதுவரை பாஜகவுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்த நவீன் பட்நாயக்கை பிரதமர் மோடி எந்தளவு மிக மோசமாக விமர்சித்திருக்கிறார் என்பதை நீங்களே தேடிப் படித்துப் பாருங்கள். அங்கே பாஜகவுக்கு இருந்த ஆதரவு இந்த மோதலால் காணாமல் போய்விட்டது.
கேரளாவில் பாஜக 3 தொகுதிகள் வரை ஜெயிக்கும் என்று பாஜகவினர் சொல்வதைக் கேட்டால் அழுவதா? சிரிப்பதா? என்று தெரியவில்லை. தமிழ்நாட்டில் 2 வது பெரிய கட்சி என்றார் அண்ணாமலை. தேர்தல் முடிவுகள் நெருங்க நெருங்க அதிக வாக்குகள் பெறுவோம் என்று தேய்ந்துப் போய் நிற்கிறார்.
ஆக, பாஜக எந்த இடங்களிலும் முன்பு பெற்ற அதே எண்ணிக்கையிலான சீட்டுகளை வெல்வதற்கு வாய்ப்பே இருப்பதாகத் தெரியவில்லை.












Click it and Unblock the Notifications