’கூட்டிகிட்டு போனார்’.. வேலூரில் பெரியார் மணியம்மை திருமணம் குறித்த பேச்சு- துரைமுருகன் வருத்தம்!
சென்னை: வேலூரில் திமுக முப்பெரும் விழாவில் தந்தை பெரியார்- மணியம்மை திருமணம் குறித்து பேசியதற்காக திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
வேலூரில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் அமைச்சர் துரைமுருகன் திமுக எப்படி உருவானது என விவரித்திருந்தார்.

அமைச்சர் துரைமுருகன் தமது பேச்சில், கழகம் (திமுக) பிறந்ததற்கு நாங்கள்தான் (வேலூர்) காரணம். இந்த மாவட்டம் இல்லாவிட்டால் கழகம் பிறந்திருக்காது. திமுக உருவாகி இருக்காது. திராவிடர் கழகமாக பெரியாரிடத்திலே பணியாற்றி இருந்தோம். பெரியார் எங்கள் ஊருக்கு (வேலூருக்கு) வந்தார். மணியம்மையை பார்த்தார்.. கூட்டிகிட்டுப் போய்ட்டார்.. அவர் தொண்டு செய்ய வைத்திருந்தார். நீண்ட நாட்களுக்குப் பின் தனக்குப் பிறந்த அந்த இயக்கத்தை நடத்துவதற்கு ஒரு அறிவுள்ள பெருமாட்டி கிடைத்தார் என்று அவரை திருமணம் செய்து கொண்டார். அண்ணா அவர்கள் இது பொருந்தா திருமணம் என்று அறிக்கை விட்டார். கழகத்தில் இருந்து வெளியேறினார். திமுக உருவானது. ஆக, வேலூரில் இருக்கிற மணியம்மை இல்லாவிட்டால், பெரியார் அவரை திருமணம் செய்யாவிட்டால் திமுக வந்திருக்காது. ஆக, திமுக வந்ததற்கே எங்க மாவட்டம்தான் காரணம் (கூட்டம் ஆப்பரிக்கிறது.. முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக தலைவர்கள் முகத்தில் புன்னகை) என தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன் என தெரிவித்திருந்தார்.
அமைச்சர் துரைமுருகன் பேச்சு, திராவிடர் கழகத்தினரை அதிருப்தி அடையச் செய்ததாக சிலர் செய்தி பரப்பி இருந்தனர். சமூக வலைதளங்களிலும் இது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
இந்நிலையில் திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் இன்று வெளியிட்ட அறிக்கையில், வேலூர் பொதுக்கூட்டத்தில் பெரியார் மணியம்மை திருமணம் குறித்து பேசும் போது பயன்படுத்திய வார்த்தைகள் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மற்றும் பெரியார் பற்றாளர்களுக்கு வருத்தம் தந்திருப்பதாக அறிகிறேன். நான் பயன்படுத்திய வார்த்தைகள் வருத்தத்தை தந்திருந்தால் அதற்காக வருந்துகிறேன். பெரியார் கொள்கைகளில் நான் எவ்வளவு பிடிப்பு உள்ளவன் என்பதை கி.வீரமணி நன்கு அறிவார் என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications