பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அரசு நிதியுதவி.. பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம்.. அமைச்சர் அறிவிப்பு!
சென்னை: தமிழகத்தில் கொரோனாவுக்கு பெற்றோரை இழந்த குழந்தைகள் குறித்து கணக்கெடுப்பு பணிகள் நடந்து வருவதாக அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரஸ் 2-வது அலை அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தி இருக்கின்றன.
ஏராளமான குழந்தைகள் கொரோனாவுக்கு பெற்றோரை பறிகொடுத்து உதவ யாரும் இல்லாமல் நிர்கதியாய் உள்ளனர்.

குழந்தைகளுக்கு அரசு உதவி
இதனால் பல்வேறு மாநிலங்கள் ஆதரவில்லாத குழந்தைகளுக்கு நிதியுதவி அளித்து வருகின்றன. அந்த வகையில் தமிழக அரசும், கொரோனா நோய்த் தொற்றினால் பெற்றோர்களை இழந்து, ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளுக்கு, அவர்களது பெயரில் தலா 5 லட்ச ரூபாய் வைப்பு நிதி செலுத்தவும் அந்தக் குழந்தை 18 வயது நிறைவடையும் போது, அந்தத் தொகை அந்தக் குழந்தைக்கு வட்டியோடு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

கணக்கெடுப்பு தீவிரம்
இது தவிர தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனாவால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சிறப்பு பாதுகாப்பு மையங்களை அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இந்த நிலையில் நிதி வைப்பு தொகை செலுத்துவதற்காக தமிழகத்தில் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் குறித்த கணக்கெடுப்புப் பணி நடைபெற்று வருவதாக தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் கூறியுள்ளார்.

மாதம் ரூ.3000
இது தொடர்பாக தூத்துக்குடியில் அவர் கூறியதாவது:- கொரோனாவால் தாய், தந்தை இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு ரூ.3 லட்சமும், ஒருவரை மட்டும் இழந்த குழந்தைகளுக்கு ரூ.3 லட்சமும் வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும். மேலும், மாதம் ரூ.3000 வழங்கப்படும். தமிழகம் முழுவதும் பெற்றோரை பறிகொடுத்து இருக்கும் குழந்தைகள் குறித்து கணக்கெடுப்பு நடந்து வருகிறது.

குழந்தை திருமணங்கள் அதிகரிப்பு
இது தொடர்பாக பொதுமக்களும் அந்தந்த வட்டாட்சியர், கோட்டாட்சியர், கலெக்டர்களிடம் விண்ணப்பிக்கலாம்.குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்தவும், குழந்தை திருமணங்களை நடத்துபவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும் தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளாக குழந்தை திருமணங்கள் அதிகரித்து உள்ளன. இவ்வாறு கீதாஜீவன் கூறினார்.












Click it and Unblock the Notifications