“மாற்றாந்தாய் மனப்பான்மை”.. மத்திய அரசை பட்ஜெட் தொடக்கத்திலேயே அட்டாக் செய்த தங்கம் தென்னரசு
சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் இன்று பட்ஜெட் உரையின் தொடக்கத்திலேயே அமைச்சர் தங்கம் தென்னரசு மத்திய அரசு மீது விமர்சனத்தை முன்வைத்து இருக்கிறார்.
அவர் பேசுகையில், "2024 - 25 ஆம் ஆண்டிற்கான வரவு - செலவுத் திட்ட மதிப்பீடுகளை நூற்றாண்டு கண்ட இந்த சட்டமன்றப் பேரவையின் முன் வைப்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன். இந்தியத் திருநாட்டின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமாகத் திகழ்ந்து கொண்டிருக்கும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு வித்திடும் வகையில் இந்த வரவு - செலவுத் திட்டத்தை உருவாக்குவதில் தொடர் வழிகாட்டுதலை நல்கிய நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

காலத்தை வென்ற அய்யன் திருவள்ளுவரின் குறளை இம்மன்றத்தில் பதிவு செய்து என் உரையைத் தொடங்குகிறேன்.
"காட்சிக்கு எளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல் மீக்கூறும் மன்னன் நிலம்". (-386)
குடிமக்கள் எவரும் எளிதில் அணுகக்கூடியவராகவும், எவரிடத்திலும் கடுமையான சொற்களைக் கூறாது ஆட்சிபுரிந்து வரும் அரசரின் நாட்டை உலகமே போற்றும். வள்ளுவரின் வாக்கு என்றுமே பொய்க்காது!
இந்த வரவு செலவுத் திட்டத்தை உருவாக்கிட வழிகாட்டியாக அமைந்தவை பேரறிஞர் அண்ணாவின் சொல்லோவியம்தான். நிதியமைச்சராகவும் பொறுப்பு வகித்த பேரறிஞர் அண்ணா 1967-68 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றும் பொழுது இந்த வரவு செலவுத் திட்டத்தில் மூன்றரை கோடி மக்களுடைய வாழ்வும், தாழ்வும் இந்த 64 பக்கங்களில் அடங்கியிருக்கின்றன. நம்முடைய இதயமும் தேர்ந்தெடுத்த அதிலே கலக்கப்பட்டிருக்கிறது. நம்மைத் மக்களின் இலட்சியங்கள் அடங்கியிருக்கின்றன என்று குறிப்பிட்டார்.
அறிஞர் அண்ணாவின் அறிவுரைகளைத் தாங்கியே இந்த வரவு செலவுத் திட்டத்தை வெறும் புள்ளிவிவரக் குவியலாக இல்லாமல் கடைக்கோடித் தமிழரின் எண்ணங்களின் அணிவகுப்பாக மாற்றிட முயன்றிருக்கிறோம். மேலும், பல்வேறு எதிர்பாரா நெருக்கடிகளுக்கு இடையே தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை வழிநடத்த வேண்டிய சூழலில் நாம் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம்.
ஆழிசூழ் தமிழ் நிலப்பரப்பிற்குள் அழையா விருந்தினர் போல் அவ்வப்போது வருகை புரிந்து இன்னல்கள் பல கொடுத்திடும் இயற்கைப் பேரிடர்கள் ஒருபுறம்: கூட்டாட்சித் தத்துவத்தை அடியோடு மறந்து மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்ளும் ஒன்றிய அரசு மறுபுறம்; இதற்கிடையே தமிழ்நாட்டை வளர்ச்சிப்பாதையில் அழைத்துச் செல்ல உதவும் வரவு-செலவுத் திட்டத்தை உருவாக்கிட வேண்டிய தேவை எழும்போதெல்லாம். தந்தை பெரியார். பேரறிஞர் அண்ணா முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் வழிகாட்டுதல்கள் மட்டுமே கலங்கரை விளக்கமாய் எங்களுக்கு அமைந்தன.
அறநெறி முதற்றே அரசின் கொற்றம் எனச் செயல்பட்டு வரும் நமது மாண்புமிகு முதலமைச்சர் தலைமையிலான இந்த அரசுக்கென ஒரு மாபெரும் தமிழ்க்கனவு உண்டு. வானவில்லின் வண்ணங்களைப் போன்று ஏழு முதன்மையான நோக்கங்களை அடிப்படையாகக் கொண்ட தமிழ்க் கனவு அது." என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications