சட்டை கலையாமல் கமல்ஹாசனை மக்கள் அப்புறப்படுத்துவார்கள்.. சொல்கிறார் தமிழிசை!
சென்னை: நடிகர் கமல்ஹாசனை சட்டை கலையாமல் மக்கள் அப்புறப்படுத்துவார்கள் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
அரவக்குறிச்சி தொகுதியில் இந்துக்கள் குறித்து நடிகர் கமல்ஹாசன் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் 2 நாட்கள் பிரச்சாரத்திற்கு ஓய்வு கொடுத்த கமல் நேற்று மீண்டும் பிரச்சாரத்தை தொடங்கினார்.
திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட தோப்பூரில் நேற்று மாலை பிரச்சாரம் செய்த கமல் அரவக்குறிச்சியில் தான் பேசியது சரித்திர உண்மை என்றார். ஏற்கனவே அவரது அரவக்குறிச்சி பேச்சுக்கு எதிர்ப்புகள் வலுத்த நிலையில் கமலின் நேற்றைய பேச்சையும் அரசியல் தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர்.

வீட்டுக்கு போய்விடலாம்
நேற்று தோப்பூரில் பேசிய கமல் சென்னையில் இருந்து வரும் குரலும், டெல்லியில் இருந்து வரும் குரலும் பொய் சொல்லி மக்களை ஏமாற்ற முடியாது. இந்த அரசு வீழும். வீழ்த்தப்பட வேண்டும். வீழ்த்துவோம். இதில் வீழ்த்துவோம் என்பதை வன்முறையாக பேசிவிட்டதாக நினைத்து விடக் கூடாது. ஜனநாயகப்படி வீழ்த்துவோம். ஒரு காயமும் படாது. வெள்ளை வேட்டியில் அழுக்கு படாமல் நீங்கள் வீட்டுக்கு போய் விடலாம் என்றார்.

தமிழிசை கண்டனம்
அவரது இந்த பேச்சுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் கமல்ஹாசனின் பேச்சுக்கு தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது

திரித்து வெளியிடுகிறார்
கமல்ஹாசனை விட சிறப்பாக படித்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். சரித்திர உண்மை என்று சொல்லி சரித்திரத்தை திரித்து பார்க்கிறார். திரித்து வெளியிடுகிறார். ரணத்தை ஆற்றுகிற ரணமாக இருக்கிறது இந்து தீவிரவாதம் என்று சொல்கிறார்.

பிரிவினைவாதம்
ரணமாக இல்லை. அது ஆறிக்கொண்டிருப்பதை குத்திக்கிளறி ரத்தம்வர வைத்துக்கொண்டிருக்கிறார். கமல்ஹாசன் பிரிவினைவாதத்தை தூண்டிக் கொண்டு இருக்கிறார்.

அப்புறப்படுத்துவார்கள்
தேர்தல் பிரச்சாரத்தில் பேசியதை சாதனை என்று சொல்லி பேசிக்கொண்டு இருக்கிறார். ஆட்சியாளர்களை சட்டை கலையாமல் வீட்டுக்கு அனுப்புவாராம். சட்டை கலையாமல் அவரை அரசியலில் இருந்து தமிழக மக்கள் அப்புறப்படுத்துவார்கள். இவ்வாறு தமிழிசை கூறினார்.












Click it and Unblock the Notifications