பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது.. மாணவர்களே அச்சமின்றி எழுதுங்கள் ஆல் தி பெஸ்ட்
சென்னை: தமிழ்நாடு முழுவதும் பிளஸ் 2 பொதுத் தேர்வு நாளை தொடங்குகிறது. தமிழகம் முழுவதிலும் உள்ள 3,302 மையங்களில் 7.25 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் ஆயுதம் ஏந்திய போலீஸார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கொரோனா காலத்தில் அதிகம் பாதிக்கப்பட்டது பள்ளி மாணவர்கள்தான். கடந்த 2020ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை பள்ளி வகுப்புகள் நடைபெறுவதிலும், தேர்வுகள் நடத்துவதிலும் குழப்பமான நிலையே இருந்தது. இதனால் அதிகம் பாதிக்கப்பட்டது மாணவர்கள்தான்.

கடந்த 2023-24 கல்வி ஆண்டில்தான் இயல்பு நிலை திரும்பியது. வகுப்புகள் சரியான நாளில் தொடங்கப்பட்டு தேர்வுகளும் சரியாக நடைபெற்று தேர்வு முடிவுகளும் வெளியாகின. இந்த ஆண்டு கடந்த ஜூன் மாதம் பள்ளிகள் தொடங்கிய நிலையில் காலண்டு, அரையாண்டு தேர்வுகளும் கூட பொதுத்தேர்வுகள் போலவே மாணவர்களுக்கு நடைபெற்றது. இதனால் மாணவர்களின் அச்சம் நீங்கியது.
இந்த நிலையில் பிளஸ் 2 பொதுத் தேர்வு நாளை மார்ச் 1ஆம் தேதி தொடங்கி மார்ச் 22ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. முதல் நாளில் தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வை தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 3,302 மையங்களில் 7.25 லட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர்.
பொதுத் தேர்வுக்கான அறை கண்காணிப்பாளர் பணியில் 47 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். முறைகேடுகளை தடுக்க 4,200 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியர், முதன்மை கல்வி அலுவலர்,வருவாய் துறை அதிகாரிகள் தலைமையிலும் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் ஆயுதம் ஏந்திய போலீஸார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தேர்வுகள் முறையாக நடைபெற ஏதுவாக, தேர்வுத் துறையால் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வு மையங்களில் குடிநீர், இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம் மற்றும் கழிப்பறை வசதிகள் சிறப்பான முறையில் செய்யப்பட்டுள்ளன.
மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தேர்வு அறைக்குள் செல்போன் உள்ளிட்ட மின்சாதனங்களை கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹால் டிக்கெட்டில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளை மாணவர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தேர்வுத் துறை அதிகாரிகள் கூறினர்.
மார்ச் 5 ஆங்கிலம், மார்ச் 8 கணினி அறிவியல், உயிரி அறிவியல், புள்ளியியல், மார்ச் 11 வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல், மார்ச் 15ஆம் தேதி இயற்பியல், பொருளாதாரம், கணினி தொழில்நுட்பம், மார்ச் 19ஆம் தேதி கணிதம், விலங்கியல், நுண் உயிரியல் உள்ளிட்ட தேர்வுகள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு தேர்விற்கும் போதிய அவகாசம் அளிக்கும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.
பிளஸ் 2 மாணவர்களே பொதுத்தேர்வினை அச்சமின்றி பதற்றமின்றி ரிலாக்ஸ் ஆக எழுதுங்கள் ஆல் தி பெஸ்ட் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications