இன்று காலை வெளியாகிறது பிளஸ் 2 தேர்வு ரிசல்ட்.. மிகுந்த எதிர்பார்ப்பில் மாணவர்கள்! எப்படி பார்ப்பது?
சென்னை:தமிழகத்தில் இன்று காலை பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளதால், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இன்று காலை 9.30 மணிக்கு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட உள்ள நிலையில், மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை tnresults.nic.in, dge.tn.gov.in மற்றும் results.digilocker.gov.in ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 2-ந்தேதி தொடங்கி 26-ந்தேதி வரை நடைபெற்றது. மாநிலம் முழுவதும் பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் சேர்த்து சுமார் 8 லட்சம் மாணவ-மாணவிகள் இந்த தேர்வில் பங்கேற்றனர்.

தேர்வு முடிந்ததும், விடைத்தாள்கள் மதிப்பீட்டு பணிகள் கடந்த ஏப்ரல் 6-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை தீவிரமாக நடைபெற்றன. ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் இந்த பணியில் ஈடுபட்டு மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தினர்.
தொடர்ந்து, மாணவர்களின் மதிப்பெண்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்வது உள்ளிட்ட இறுதிக்கட்ட பணிகளை அரசு தேர்வுத்துறை மேற்கொண்டது.இந்த நிலையில், இன்று காலை 9.30 மணிக்கு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட உள்ளன. இதற்காக பள்ளிக்கல்வித்துறை அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை tnresults.nic.in, dge.tn.gov.in மற்றும் results.digilocker.gov.in ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.
தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள மாணவர்கள் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையதளங்களில் அதிகளவு மாணவர்கள் ஒரே நேரத்தில் அணுக வாய்ப்பு இருப்பதால், சில நேரங்களில் தாமதம் ஏற்படலாம் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மேலும், பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் படித்த பள்ளிகளில் சமர்ப்பித்திருந்த உறுதிமொழி படிவத்தில் குறிப்பிடப்பட்ட செல்போன் எண்களுக்கு குறுஞ்செய்தி (SMS) மூலமாக தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும். அதேபோல் தனித்தேர்வர்களுக்கும், ஆன்லைன் விண்ணப்பத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த மொபைல் எண்களுக்கு தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மாணவர்களின் உயர்கல்வி மற்றும் எதிர்கால தொழில் வாய்ப்புகளுக்கு மிக முக்கியமானதாக கருதப்படுகின்றன. குறிப்பாக பொறியியல், மருத்துவம், கலை மற்றும் அறிவியல் கல்லூரி சேர்க்கைகளுக்கு இந்த மதிப்பெண்கள் அடிப்படையாக இருக்கும். இதனால் மாணவர்களும் பெற்றோர்களும் மிகுந்த ஆவலுடன் தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
இந்த ஆண்டும் மாவட்ட வாரியாக அதிக தேர்ச்சி விகிதம் எந்த மாவட்டத்திற்கு கிடைக்கும், மாநில அளவில் யார் முதல் மதிப்பெண் பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. தேர்வு முடிவுகள் வெளியான உடனே மாநில அளவிலான தேர்ச்சி சதவீதம், பாடவாரியான முடிவுகள் மற்றும் மாவட்ட வாரியான விவரங்களையும் பள்ளிக்கல்வித்துறையால் வெளியிடப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications