சாதியை குறிப்பிட்டு சம்மன்.. விவசாயிகளை மிரட்டிய அமலாக்கத்துறை? விசாரணையை தொடங்கியது சென்னை போலீஸ்!
சென்னை: சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய விவகாரத்தில், காவல்துறை விசாரணையை தொடங்கியுள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள அப்பம்மா சமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கண்ணையன் மற்றும் கிருஷ்ணன். சகோதரர்களான இவர்களின் நிலத்தை அபகரிக்கும் நோக்கில் பாஜகவின் சேலம் கிழக்கு மாவட்ட இலக்கிய அணி செயலாளர் குணசேகரன் என்பவர் தொடர்ந்து அச்சுறுத்தி, கொலை மிரட்டல் விடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு நீதிமன்றத்திலும் வழக்கு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், விவசாயிகள் கண்ணையன் மற்றும் கிருஷ்ணனுக்கு சில மாதங்களுக்கு முன்பு அமலாக்கத்துறையில் இருந்து சம்மன் ஒன்று வந்துள்ளது. சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் இருந்து வந்த அந்த சம்மனில் அவர்களின் ஜாதி பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. வீட்டு எண் உள்ளிட்ட விவரங்கள் எல்லாமல், சாதி பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது.
சம்மன் வந்ததை தொடர்ந்து வழக்கறிஞர்களின் உதவியுடன் சென்னைக்கு சென்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் அவர்கள் ஆஜராகி உள்ளனர். உணவிற்கே கஷ்டப்படும் தங்கள் வங்கி கணக்கில் வெறும் 500 ரூபாய் மட்டுமே உள்ள நிலையில் தங்கள் மீது சட்டவிரோத பணப் பரிவர்த்தனை செய்ததாக குற்றம்சாட்டி நோட்டீஸ் வழங்கியுள்ளதாக விவசாயிகள் முறையிட்டுள்ளனர். இந்நிலையில் தான் தற்போது இந்த விவகாரம் வெளியே வரத் தொடங்கியுள்ளது.
குக்கிராமத்தில் வசிக்கும் ஏழை விவசாயிகளுக்கு, சட்டவிரோத பணப் பரிவர்த்தனை என அமலாக்கத்துறை சம்மன் அனுப்ப என்ன காரணம், பாஜக நிர்வாகி குணசேகரனின் தூண்டுதலின் பேரில் அமலாக்கத்துறை செயல்பட்டுள்ளதா என்றும், முகவரியில் ஜாதி பெயருடன் சம்மன் அனுப்பிய நோக்கம் என்ன எனவும் சமூக வலைதளங்களில் கடுமையாக கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
சென்னை சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரான தங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் மிரட்டியதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். பாஜக நிர்வாகி குணசேகரன், தங்கள் நிலத்தை அபகரிக்க முயற்சித்ததாகவும், நிலத்தை தர மறுப்பதன் காரணமாகவே அமலாக்கத்துறை சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.
சட்டவிரோதமாகச் செயல்பட்ட அமலாக்கத்துறை மீதும், நிலத்தை அபகரிக்க முயலும் பாஜக நிர்வாகி மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி விவசாயிகள் சார்பில் போலீசில் புகார் அளித்த வழக்கறிஞர் பிரவீணாவிடம் நுங்கம்பாக்கம் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். ஆதாரங்கள் அடிப்படையில், அமலாக்கத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications