கி.ரா. மறைவு தமிழ் இலக்கிய உலகில் நிரப்ப முடியாத வெற்றிடம்:பழ. நெடுமாறன், தினகரன், கமல்ஹாசன் இரங்கல்
சென்னை: கரிசல் எழுத்தாளர் கி.ரா. மறைவு என்பது தமிழ் இலக்கிய உலகில் நிரப்ப முடியாத வெற்றிடத்தை ஏற்படுத்திவிட்டது என்று உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கை : தமிழ்நாட்டின் முதுபெரும் எழுத்தாளரும் நாட்டுப்புறக் கதைக் களஞ்சியத்தைத் தொகுத்தவரும், குறிப்பாக கரிசல் மண் சார்ந்த எழுத்தாக்கங்களைப் படைப்பதில் முன் மாதிரியாகத் திகழ்ந்தவருமான கி. இராசநாராயணன் அவர்கள் காலமான செய்தி தமிழ் எழுத்துலகிற்குப் பேரிழப்பாகும்.

ஏழாம் வகுப்பு வரை மட்டுமே படித்த கி.ரா அவர்கள் புதுவைப் பல்கலைக்கழகத்தில் நாட்டார் வழக்கியல் துறையின் பெருமைதரு பேராசிரியராகப் பணியாற்றி, நாட்டுப்புற ஆய்வியலில் ஈடுபட எண்ணற்றவர்களை உருவாக்கியப் பெருமைக்குரியவர். 2008-ஆம் ஆண்டில் உலகத் தமிழர் பேரமைப்பு நடத்திய உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் அவருக்கு "உலகப்பெருந்தமிழர்" விருதினை வழங்கிச் சிறப்பித்தோம்.
இந்திய அரசின் சாகித்திய அகாதமி விருது உட்பட பல்வேறு விருதுகளைப் பெற்ற கி. ரா. அவர்களின் மறைவு யாராலும் இட்டு நிரப்ப முடியாத வெற்றிடத்தைத் தமிழ் இலக்கிய உலகில் ஏற்படுத்திவிட்டது. இவ்வாறு நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: முதுபெரும் தமிழ் எழுத்தாளர், கரிசல் இலக்கியத்தின் பிதாமகர், பெரியவர் திரு. கி.ராஜநாராயணன் அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து வருத்தமடைந்தேன். தமிழின் தனித்துவமான கதை சொல்லியாக, அழியாத படைப்புகளை தந்தவராக, நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடியாக திகழ்ந்த கி.ரா அவர்களின் மறைவு தமிழுக்கு பேரிழப்பாகும். அன்னாரது மறைவால் வாடும் உறவினர்கள், நண்பர்கள், வாசகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன்: கரிசல் என்னும் வட்டாரத்தை எழுதி பிரபஞ்ச உணர்வுகளைத் தொட்ட மகத்தான படைப்பாளி கி.ராஜநாராயணன் நம்மை நீங்கினார். அவருக்குப் புகழஞ்சலி.
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள இரங்கல்: கி.ரா என்று எழுத்துலகில் அனைவராலும் அழைக்கப்பட்ட கி. ராஜநாராயணன் மறைந்த செய்தி அறிந்து வருத்தமுற்றேன். கி.ரா. அவர்கள் கரிசல் பூமியையும் அதன் மக்களைப் பற்றியும் எழுதியவர். கிராமிய மணமும் கரிசல் மண்ணின் அழகையும் விரிவாகத் தனது புனைவில் பதிந்தவர். பாமர மக்களின் பேச்சு வழக்கையும் சொல்லாடல்களையும் மிகத் துல்லியமாக தனது படைப்புகளில் கையாண்டவர். இவரது கோபல்ல கிராமம் நாவல் மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை உண்டாக்கியது.
சிறுகதை, நாவல், கட்டுரை என எல்லா வகை இலக்கிய தளத்திலும் தடம் பதித்தவர். இவரது வட்டார வழக்குச் சொல்லகராதி தமிழ் படைப்புலகில் உன்னதமான பங்களிப்பாகும். பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் நாட்டுப்புறவியல் துறையில் இயக்குநராகப் பங்காற்றி தனது இலக்கிய ஆளுமையை உலகுக்கு நிரூபித்தவர். சாகித்திய அகாடமி உள்ளிட்ட பல உயரிய விருதுகளைப் பெற்றிருந்தாலும் பழகுவதிலும் தனது வாழ்க்கையிலும் எளிமையைக் கையாண்டவர். கரிசல்காட்டு இலக்கியத்தின் தந்தை என அழைக்கப்பட்ட கி. ராஜநாராயணனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.












Click it and Unblock the Notifications