அக்கா பதநீர் குடிக்க.. "தளபதி" மெட்ரோவில் பயணிக்க.. அண்ணன் சீமான் கொட்டும் மழையில் உரையாற்ற..!
மக்களுடன் அரசியல் கட்சி தலைவர்கள் நெருக்கத்தை எற்படுத்தி வருகிறார்கள்
சென்னை: ஒரு பக்கம் அக்கா தமிழிசை பதநீர் குடிக்க.. மற்றொரு பக்கம் தளபதி ஸ்டாலின் ரயிலில் பயணிக்க.. இன்னொரு பக்கம் அண்ணன் சீமான் கொட்டும் மழையில் உரையாற்ற... என்று களை கட்டுகிறது தமிழக அரசியல்!
அன்றைய காங்கிரஸ், திமுக, அதிமுக தலைவர்கள் தங்கள் வாழ்வில் சர்வ சாதாரணமாக, நடைமுறையில் செய்த காரியங்கள் ஒவ்வொன்றும் இப்போதெல்லாம் அபூர்வமாகி வருகின்றன.
ஆனால் சில காலமாக, மக்களை தேர்தல் காலங்களில் மட்டுமே மக்களுடன் அரசியல்வாதிகளுக்கு நெருக்கம் ஏற்பட்டு மறைகிறது என்ற குறை இருந்து கொண்டே இருந்தது.
செல்வாக்கு
ஆனால் இதனை இன்றைய தலைவர்கள் உடைத்து வருகின்றனர். மக்களுடன் எந்த அளவுக்கு நெருங்குகிறோமோ, அந்த அளவுக்கு செல்வாக்கு பெருகும் என்பதையும், குறையான விமர்சனங்கள் தகர்க்கப்படும் என்பதையும் நன்றாகவே உணர்ந்துள்ளனர்.
கேஷூவல்
அதனால்தான் "கேஷூவல்" என்ற விஷயத்தை கையில் எடுத்து மக்களுடனான நெருக்கத்தை அதிகப்படுத்தி கொண்டு வருகின்றனர். அந்த வகையில் ஒவ்வொரு கட்சி தலைவர்களும் போட்டி போட்டு கொண்டு மக்களை கவர்ந்து வருகிறார்கள்.
|
சீமான்
சீமான் வேலூரில் பிரச்சாரம் செய்ய போனார். பேச ஆரம்பிக்கும்போதே மழை கொட்டியது. இருந்தாலும் மழையில் நனைந்தாறே பேசிக் கொண்டிருந்தார். சீமான் மட்டுமல்ல, அங்கிருந்த கூட்டமும் அவரது பேச்சை மழையில் நனைந்து கொண்டுதான் கேட்டு கொண்டிருந்தது.
|
ஸ்டாலின்
இதேபோல, மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த திமுக தலைவர் ஸ்டாலின், ஏர்போர்ட்டில் இருந்து தேனாம்பேட்டை வரை மெட்ரோ ரயிலில் பயணித்தார். அப்போது ரயிலில் கூட்டம் குறைவாக இருந்தது. இருந்தாலும் ஸ்டாலினை பார்த்தவுடனேயே மக்களுக்கு செல்பி ஞாபகம் வந்துவிடும் போல. ஆர்வமாக வந்து ஸ்டாலின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு செல்பி எடுத்து கொண்டார்கள்.
|
தமிழிசை
இவர்களை போலவே தமிழக பாஜக தலைவர் தமிழிசையின் செயல்பாடும் அமைந்து வருகிறது. திருநெல்வேலி மாவட்டம் முதலியார்பட்டி கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சிக்கு சென்றபோது பனைத்தொழில் செய்பவர்கள் தமிழிசைக்கு பதனீர் தந்துள்ளார்கள். அதனை பனை ஓலையிலேயே வைத்து ரசித்து குடிக்கிறார் தமிழிசை. இப்படி ஒவ்வொரு கட்சி தலைவர்களும் மக்களை ஒவ்வொரு விதமாக நெருங்கி வருவதை பார்க்கும்போது நமக்கு சந்தோஷமாகவே இருக்கிறது!