கள்ளக்குறிச்சி விவகாரம்: தமிழக அரசு எச்சரிக்கை.. சென்னையில் வழக்கம்போல் செயல்பட்ட தனியார் பள்ளிகள்
சென்னை : கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தமிழக அரசின் கடும் எச்சரிக்கையை அடுத்து, சென்னையில் உள்ள தனியார் பள்ளிகள் வழக்கம் போல் செயல்பட்டன.
கள்ளக்குறிச்சி பள்ளி மீதான தாக்குதலைக் கண்டிக்கும் விதமாக தனியார் பள்ளிகள் தமிழகம் முழுவதும் இயங்காது என அறிவிக்கப்பட்டது. இந்தச்சூழலில், மூடப்படும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு அறித்தது. அரசின் எச்சரிக்கையை மீறி பள்ளிகளுக்கு விடுமுறை விட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது.

மாணவி மரணம் - தனியார் பள்ளி சூறை
கள்ளக்குறிச்சி அருகே தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளி மாணவி மரணம் அடைந்த சம்பவத்தைக் கண்டித்து, அந்தப் பள்ளி சூறையாடப்பட்டது. பள்ளி வாகனங்கள், போலிசார் வாகனங்கள் மற்றும் பள்ளியில் இருந்த பொருட்கள், சான்றிதழ்கள் என அனைத்தையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தீ வைத்து கொளுத்தினர். இதனால் அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி பள்ளி சூறையாடியதை கண்டித்து பள்ளிகள் இயங்காது என தனியார் பள்ளிகள் சங்கத்தின் தலைவர் நந்தகுமார் அறிவித்து இருந்தார். தனியார் பள்ளி வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக கூட்டமைப்பு அறிவித்தது. தனியார் பள்ளிகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும், வருங்காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கும் வண்ணம் தனியார் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் பள்ளிகளை மூட வேண்டும் என்று கூறி இருந்தனர். ஆனால், விடுமுறை அளித்தால் தனியார் பள்ளிகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மெட்ரிகுலேஷன் இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்தது.
மேலும், பள்ளிக்கல்வி சார்பில் தனியார் பள்ளிகளை திறக்க வேண்டும் என்றும், மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் தவறான சிந்தனை உருவாக வழி வகுக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. அதனால் அனைத்து தனியார் பள்ளிகளும் செயல்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டது. அரசின் உத்தரவை மீறி பள்ளிகள் மூடப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அரசின் உத்தரவை மதித்து பெரும்பாலான தனியார் பள்ளிகள் இன்று வழக்கம்போல் செயல்பட்டன. சென்னை மாவட்டத்தில் அரசு, உதவி பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதி பள்ளிகள் என 1300 செயல்பட்டு வருகின்றன. தனியார் பள்ளிகள் மட்டும் 600 செயல்படுகின்றன. மெட்ரிக்குலேசன், சி.பி.எஸ்.இ. பள்ளிகளாக செயல்படும் இந்த பள்ளிகளில் ஒரு சிலவற்றை தவிர அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல் இயங்கின.
இதுகுறித்து சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மார்ஸ் கூறியதாவது:- சென்னையில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளும் இன்று வழக்கம்போல் செயல்படுகின்றன. மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் ஆய்வாளர் மூலம் ஆய்வு செய்யப்பட்டன. மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் வகுப்புகள் நடைபெறுகின்றன. ஏதேனும் பள்ளி செயல்படவில்லை என தெரிய வந்தால், அந்தப் பள்ளி நிர்வாகத்தின் மீது விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புவதோடு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
Recommended Video
தமிழக அரசின் கடும் எச்சரிக்கை காரணமாக சென்னையில் உள்ள தனியார் பள்ளிகள் இன்று வழக்கம்போல் செயல்பட்டன. இதனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிகளுக்கு வழக்கம் போல் அழைத்துச் சென்றனர். பள்ளிகள் விடுமுறையின்றி தொடர்ந்து இயக்கப்பட்டு வருவதால் மாணாக்கர்களின் பெறறோர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.












Click it and Unblock the Notifications