வங்கக் கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.. பல மாவட்டங்களில் மழை கொட்டும்- வானிலை மையம்
சென்னை: நீலகிரி, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்றும் நாளையும் கன மழை பெய்வதற்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.
கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் தாக்கத்தால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது .
தென்மேற்குப் பருவக்காற்றால் தமிழ்நாட்டில் இன்று பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
சினிமாவில் நடிகை.. கோடம்பாக்கம் வந்து சீரழித்த இளம் பெண்.. ஆண் நண்பர் செய்த பகீர்.. திடுக் தகவல்
சென்னையில் மழை
அடுத்த 48 மணி நேரத்தில், நீலகிரி, கோவை, திண்டுக்கல் , தென்காசி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. சென்னை உட்பட வடக்கு கடலோர மாவட்டங்கள், வேலூர் , திருப்பத்தூர், ராணிப்பேட்டையில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கிருஷ்ணகிரி, சேலம்
கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டத்திலும் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யும். அதே நேரம், நாளை நீலகிரி மற்றும் கோவை ஆகிய மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். இதேபோல, தேனி, திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
நீலகிரி, கோவை
ஜூலை 24 மற்றும் 25 ஆம் தேதியில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அன்றைய தினம், தேனி, திண்டுக்கல், தென்காசி , கன்னியாகுமரி வரை கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது.
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி
வங்கக் கடலில் 23ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, கடலில் அலைகளின் சீற்றம் அதிகமாக இருக்கக்கூடும். எனவே, தமிழக மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.