சபாநாயகருடன் அதிமுக எம்எல்ஏக்கள் சந்திப்பு.. செய்யாறு விவசாயிகள் விவகாரத்தை அவையில் எழுப்ப திட்டம்?
சென்னை: சபாநாயகர் அப்பாவு உடன் அதிமுக கொறடா எஸ்.பி வேலுமணி உள்பட அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் சி.விஜயபாஸ்கர், தளவாய் சுந்தரம் ஆகியோர் சந்தித்து பேசினர்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய 10 சட்ட மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றுவதற்காக தமிழக சட்டசபையின் சிறப்புக் கூட்டம் இன்று கூடுகிறது. சட்டசபை சிறப்புக்கூட்டத்தொடருக்காக உறுப்பினர்கள் வரத்தொடங்கியுள்ளனர். இதைத்தொடர்ந்து அதிமுக எம்.எல்.ஏக்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.

சட்டமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சித்தலைவருக்கான அறையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. செய்யாறு விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது தொடர்பாக அவையில் கேள்வி எழுப்ப அதிமுக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், சட்டம் ஒழுங்கு பிரச்சினை தொடர்பாகவும் அவையில் எழுப்ப அதிமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. சபாநாயகர் இதற்கு ஒப்புதல் அளிப்பாரா? என்பது தெரியவில்லை.

எனவே சபாநாயகர் ஒப்புதல் அளிக்காத பட்சத்தில் அமளியில் ஈடுபடுவதற்கும் வெளிநடப்பு செய்யவும் வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே, சபாநாயகர் அப்பாவு உடன் அதிமுக கொறடா வேலுமணி உள்பட அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது விவசாயிகள் மீது குண்டாஸ் போடப்பட்ட விவகாரம் தொடர்பாக பேரவையில் பேச அனுமதி கோரியதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications