தமிழக சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டம்.. தலைமை செயலகத்தில் அதிமுக எம்.எல்.ஏக்களுடன் எடப்பாடி ஆலோசனை
சென்னை: தமிழக சட்டமன்றத்தின் சிறப்புக்கூட்டம் சற்று நேரத்தில் கூட உள்ள நிலையில், சட்டமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சித்தலைவருக்கான அறையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. செய்யாறு விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது தொடர்பாக அவையில் கேள்வி எழுப்ப அதிமுக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி திருப்பி அனுப்பிய 10 சட்ட மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றுவதற்காக தமிழக சட்டசபையின் சிறப்புக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது. இன்று காலை அவை கூடியதும், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வேணு, வெங்கடசாமி, வேல்துரை ஆகியோரின் மறைவுக்கும், பங்காரு அடிகளார் மற்றும் சங்கரய்யா ஆகியோரின் மறைவுக்கும் இரங்கல் வாசிக்கப்படுகிறது.

இதனை தொடர்ந்து மசோதாக்களை திருப்பி அனுப்பிய ஆளுநர் ஆர் என் ரவியின் செயலுக்கு எதிராக சட்டப்பேரவையில் அரசினர் தனித்தீர்மானத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் முன்மொழிகிறார். இந்த சட்ட முன்வடிவுகளை எந்த காரணமும் இன்றி ஆளுநர் திருப்பி அனுப்பியது ஏற்புடையது அல்ல என்று முதல்வர் மு.க ஸ்டாலின் பேச உள்ளார்.
அரசமைப்பின் 200-வது பிரிவின் படி, நிராகரிக்கப்பட்ட சட்டமுன்வடிவுகளை மீண்டும் நிறைவேற்றி கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன. ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களையும் சம்மந்தப்பட்ட துறை அமைச்சர்கள் தாக்கல் செய்ய உள்ளனர். சட்டசபை சிறப்புக்கூட்டத்தொடருக்காக உறுப்பினர்கள் வரத்தொடங்கியுள்ளனர்.
இதைத்தொடர்ந்து அதிமுக எம்.எல்.ஏக்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். சட்டமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சித்தலைவருக்கான அறையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. செய்யாறு விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது தொடர்பாக அவையில் கேள்வி எழுப்ப அதிமுக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல், சட்டம் ஒழுங்கு பிரச்சினை தொடர்பாகவும் அவையில் எழுப்ப அதிமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. சபாநாயகர் இதற்கு ஒப்புதல் அளிப்பாரா? என்பது தெரியவில்லை. எனவே சபாநாயகர் ஒப்புதல் அளிக்காத பட்சத்தில் அமளியில் ஈடுபடுவதற்கும் வெளிநடப்பு செய்யவும் வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications