பயணிகளின் கவனத்திற்கு.. தமிழகத்தில் இனி இந்த மோட்டல்களில்தான் அரசு பேருந்து நிற்கும்.. லிஸ்ட் இதோ
சென்னை: தமிழக நெடுஞ்சாலைகளில் மோசமாக இயங்கி வந்த 5 ஹோட்டல்களில் அரசு பேருந்துகள் நிற்க தடை விதிக்கப்பட்ட நிலையில், இனிமேல் அரசுப் பேருந்துகள் நிற்கும் புதிய ஹோட்டல்களின் பட்டியலை தமிழ்நாடு போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் விரைவுப் பேருந்துகள் உணவு இடைவேளைக்காக நெடுஞ்சாலைகளில் உள்ள உணவகங்களில்(மோட்டல்களில்) நின்று செல்வது வழக்கம். அப்போது பேருந்தை விட்டு இறங்கி சாப்பிடுவதற்காக செல்லும் பயணிகள் ஏன் இறங்கி வந்தோம்? என்று சிறிது நேரத்திலேயே உணர்ந்து விடுவார்கள்.
ஏனெனில் மற்ற ஹோட்டல்களை விட இங்கு விலை பல மடங்கு அதிகமாக இருக்கும். அப்படி விலை விண்ணுயர இருந்தாலும் அங்கு விற்கப்படும் உணவும் தரமாக, சுத்தமாக இருக்காது. உணவு படுமோசமாக இருக்கும். இது தவிர அந்த ஹோட்டல்களில் நிலை, அங்குள்ள ஊழியர்கள் நடத்தும் விதம் ஆகியவற்றை கண்டு பயணிகள் பயணத்தையே சுத்தமாக வெறுத்து விடுவார்கள்.
தமிழகத்தில் 13 புதிய பேருந்து நிலையங்கள்.. அரசு அறிவிப்பு.. இதில் உங்க மாவட்டம் இருக்கானு பாருங்க!
பர்ஸும் காலியாகி, மனநிம்மதியும் பறிபோகிறது
'இந்த ஹோட்டல்களால் எங்களின் பர்ஸும் காலியாகி, மனநிம்மதியும் பறிபோய் உள்ளது' என்று பயணிகள் கடந்த பல ஆண்டுகளாக போக்குவரத்து கழகத்துக்கு புகார் தெரிவித்து வருகின்றனர். இந்த தொடர் புகார்களுக்கு திமுக அரசு ஒருவழியாக செவி சாய்த்தது. அதாவது மிக மோசமாக உள்ள விழுப்புரம் விக்ரவாண்டி பகுதியிலுள்ள குறிப்பிட்ட ஐந்து உணவகங்களில் அரசுப் பேருந்துகளை நிறுத்துவதற்கு அதிரடியாக தடை விதிக்க விதித்தது தமிழ்நாடு அரசு.
இனிமேல் அரசு பஸ்கள் இங்குதான் நிற்கும்
இந்தநிலையில் தடை செய்யப்பட்ட ஹோட்டல்களுக்கு மாற்றாக இனிமேல் அரசுப் பேருந்துகள் நிற்கும் புதிய ஹோட்டல்களின் பட்டியலை தமிழ்நாடு போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக போக்குவரத்துத்துறை வெளியிட்ட உத்தரவு: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தால் நெடுந்தூரம் இயக்கப்படும் பேருந்துகள் குறிப்பிட்ட உணவகங்களில் உணவு மற்றும் இயற்கை உபாதைகளுக்காக பேருந்துகளை நிறுத்துவது வழக்கம். தரமற்ற உணவுகளை தயாரிக்கும் உணவகங்களில் பேருந்துகளை நிறுத்துவதாக புகார் எழுந்த நிலையில் போக்குவரத்துத்துறை புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
நாகர்கோவில்-நெல்லை-சென்னை பேருந்துகள்
சென்னையில் இருந்து கோவை, திருநெல்வேலி, செங்கோட்டை, நாகர்கோவில், கன்னியாகுமரி செல்லும் பேருந்துகள் பிரசன்ன பவனில் உணவு அருந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சேலம், திண்டுக்கல், காரைக்குடி செல்லும் பேருந்துகளின் பயணிகள் வசந்தபவனில் உணவு அருந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் இருந்து சென்னை வரும் பேருந்துகளின் பயணிகள் உளுந்தூர்பேட்டை, விழுப்புரம் இடையே அமைந்துள்ள ஸ்ரீபாலாஜி ஆரியாஸ் உணவகத்தில் நிற்க உத்தரவிடப்பட்டுள்ளது.
வாட்ஸ் அப் மூலம் தெரிவிக்க வேண்டும்
எந்தவித புகாருமின்றி பயணிகளின் உணவுக்காக பேருந்துகளை நிறுத்தி முறையாக உத்தரவை பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்துகள் இயக்கப்பட்ட விவரம், உணவுக்காக நிறுத்திய விவரங்களை வாட்ஸ் அப் மூலமாக தெரிவிக்க வேண்டும் என்று அனைத்து கிளை மேலாளர்கள் மற்றும் ஓட்டுநர், நடத்துனர்களுக்கு போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.