தீபாவளிக்கு அரசுப் பேருந்துகள் இயக்கம் பாதிக்குமா... நாளை தெரியும் முடிவு!
Recommended Video

சென்னை : பண்டிகை கால ஊதியத்தை முன்கூட்டியே வழங்குதல், ஊதிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் நாளை போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். போராட்டத்தின் முடிவில் வேலைநிறுத்த அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிகிறது.
பண்டிகை காலங்களில் போக்குவரத்து தொழிலாளர்கள் திடீரென போராட்டம் அறிவித்து விடுகின்றனர். கடந்த ஆண்டு தீபாவளியின் போது போக்குவரத்து தொழிலாளர்கள் திடீரென வேலைநிறுத்தம் அறிவித்ததோடு, பேருந்துகளையும் ஆங்காங்கே நிறுத்தினர். இதனால் தீபாவளிக்கு ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே பொது போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்களும் பாதிக்கப்பட்டனர்.

தற்காலிக ஓட்டுனர்களை நியமித்து அரசு எடுத்த முயற்சிகளும் விபத்து, அசம்பாவிதங்கள் என்றே முடிந்தன. ஒரு வழியாக போனஸ் பேச்சுவார்த்தை முடிந்து கடைசி நேரத்தில் போக்குவரத்து ஊழியர்கள் பேருந்தை இயக்க சம்மதம் தெரிவித்ததையடுத்து தீபாவளிக்கு முந்தைய நாள் முதல் பேருந்து இயக்கம் சீரானது. இந்த ஆண்டு போனஸ் விவகாரத்தில் எந்த பிரச்னையும் இல்லாததால் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்திற்கு வாய்ப்பில்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கடந்த வாரம் கூறி இருந்தார்.
இந்நிலையில் ஊதிய நிலுவைத்தொகை, ஓய்வு கால பயன்கள் மற்றும் பண்டிகை கால ஊதியத்தை வழங்க போக்குவரத்து தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்தன. இது தொடர்பாக தொழிலாளர் நலத்துறை துணை ஆணையர் பாலசுப்பிரமணியம் தலைமையில் 2 கட்டமாக நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது. இதனால் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் நாளை சென்னை பல்லவன் இல்லம் அருகே போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
[தீபாவளியன்று '108' ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஸ்ட்ரைக் அறிவிப்பு.. தடை போட்டது ஹைகோர்ட்]
அரசுக்கும், போக்குவரத்து கழகத்திற்கும் இன்னும் அவகாசம் இருக்கிறது. நாளைக்குள் பேச்சுவார்த்தைக்கு அழைத்து சுமூக தீர்வு கண்டால் வேலைநிறுத்தத்தில் ஈடுபட மாட்டோம், இல்லையென்றால் எங்களை வேலைநிறுத்தத்திற்கு அரசு தள்ளுவதை தவிர்க்க முடியாது. எப்போது முதல் வேலைநிறுத்தம் என்பதை தொழிற்சங்கங்கள் கலந்து பேசி நாளை முடிவை அறிவிக்கும் என்று தொமுச தெரிவித்துள்ளது.
இதனிடையே வேலைநிறுத்தம் அறிவிக்கப்படுவதற்கு முன்னரே கடந்த ஆண்டைப் போலவே போக்குவரத்து ஊழியர்கள் முன்கூட்டியே பேருந்து இயக்கத்தை நிறுத்திவிடுவார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தீபாவளி பண்டிகைக்காக மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆயத்தமாகி வரும் நிலையில் போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்த அறிவிப்பு வந்தால் மக்கள் அவதிக்கு ஆளாக நேரிடும்.












Click it and Unblock the Notifications