தீபாவளியன்று '108' ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஸ்ட்ரைக் அறிவிப்பு.. தடை போட்டது ஹைகோர்ட்
சென்னை: '108' ஆம்புலன்ஸ் ஊழியர்கள் 5ம் தேதி இரவு முதல் 6ம் தேதி இரவு வரை நடத்தப் போவதாக அறிவித்திருந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
தீபாவளி பண்டிகையையொட்டி '108' ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு 30 சதவீத போனஸ் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அந்த ஊழியர்களின் சங்கம் அரசுக்கு வலியுறுத்தி இருந்தது.
அப்படி மட்டும் நடந்திருந்தால்.. அறநிலையத்துறை கடும் விளைவுகளை சந்திக்கும்.. ஹைகோர்ட் எச்சரிக்கை ]
தமிழகம் முழுவதும் ஏறக்குறைய ஒன்றரை லட்சம் பேர் இந்த சேவையில் பணியாற்றி வருகின்றனர். தமிழகத்தில் 950க்கும் மேற்பட்ட '108' ஆம்புலன்ஸ்கள் இயக்கப்படுகின்றன.
உயிர் காக்கும் அவசர உதவியில், ஈடுபட்டு வரும் நிலையில் இந்த ஊழியர்களின் கோரிக்கையை அரசு ஏற்கவில்லை. எனவே நவம்பர் 5ம் தேதி இரவு முதல் 6ம் தேதி இரவு வரை 24 மணி நேரம் ஸ்ட்ரைக் செய்வதற்கு '108' ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சங்கம் முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டது.
இதை எதிர்த்து செல்வராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த பொதுநல வழக்கை இன்று விசாரித்த உயர் நீதிமன்றம், ஆம்புலன்ஸ் சேவை என்பது அத்தியாவசிய சேவை பிரிவுகளின் கீழ் வருவதால், அதன் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதை அனுமதிக்க முடியாது என்று உத்தரவிட்டார்.
அதோடு, ஆம்புலன்ஸ் ஊழியர்களின் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.