தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயில்... வெப்பச்சலனத்தால் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் வெப்பச்சலனம் காரணமாக இன்று முதல் 29 ஆம் தேதி வரைக்கும் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் கணித்துள்ளது.
சென்னை: தமிழ்நாட்டில் தென்மேற்குப் பருவமழை பல மாவட்டங்களில் பெய்து வரும் நிலையில் வெயிலும் சுட்டெரித்து வருகிறது. வெப்பசலனத்தின் காரணமாக தமிழ்நாட்டில் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.
வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் 4 செமீ மழை பதிவாகியுள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 2 செமீ மழையும், ராமநாதபுரம் கமுதி, முதுகுளத்தூர், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் தலா 1 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
ஜூன் 26ஆம் தேதி கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 27ஆம் தேதி வட மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஜூன் 28, 29 ஆகிய தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி திண்டுக்கல், தென்காசி மாவட்டங்கள் மற்றும் வட உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கன மழையும், ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.. அதிகபட்ச வெப்பநிலை 38 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
சசிகலாவுடன் பேசியதாக.. அ.தி.மு.க..வில் இருந்து மேலும் 5 பேர் நீக்கம் - ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் அதிரடி!
அதனை அடுத்த 24 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் அதிகபட்ச வெப்பநிலை 38 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் 27ஆம் தேதி வரைக்கும் தென்மேற்கு மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.