ஆம்னி பேருந்துகளில் கட்டணக் கொள்ளை... நடவடிக்கை எடுக்க காங்.வலியுறுத்தல்
சென்னை: தீபாவளி பண்டிகை நெருங்கும் நேரத்தில் தமிழகத்தில் ஆம்னிப் பேருந்துகளில் கட்டணக் கொள்ளை நடைபெறுவதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி குற்றஞ்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
தீபாவளி நெருங்கி வரும் சூழலை பயன்படுத்திக் கொண்டு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கட்டணங்களை பலமடங்கு உயர்த்தி வசூலிக்கிறார்கள்.

கட்டண மாறுபாடு
சென்னை மாநகரில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் தமிழகத்தின் பல பகுதிகளுக்கு இயக்கப்படுகிறது. சராசரியாக பேருந்து கட்டணம் 100 சதவீதம் உயர்த்தப்பட்டிருக்கிறது. அக்டோபர் 23 ஆம் தேதி வசூலிக்கப்படுகிற கட்டணத்தை விட, அக்டோபர் 25 வெள்ளிக்கிழமை தீபாவளி பண்டிகைக்காக பயணம் மேற்கொள்பவர்கள் பல மடங்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கிறது.

214% உயர்வு
குறிப்பாக சென்னையிலிருந்து சேலத்திற்கு குளிர்சாதன வசதி இல்லாத, படுக்கை வசதி கொண்ட பயணத்திற்கு புதன்கிழமை அன்று ரூ.500 வசூலிக்கப்படுகிறது. ஆனால், அதே பயணத்தை வெள்ளிக்கிழமை மேற்கொள்பவர்களுக்கு ரூ.1570 வசூலிக்கப்படுகிறது. இது 214 சதவீதம் அதிகமாகும்.

அரசுக்கு கேள்வி
அதேபோல, ஒவ்வொரு ஊருக்கும் இத்தகைய கட்டண வேறுபாடுகளுடன் பல மடங்கு கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. இத்தகைய கட்டண வசூல்கள் ஒளிவு மறைவு இல்லாமல் பகிரங்கமாக இணைய தளத்தில் முன்பதிவு செய்து கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இத்தகைய கட்டணக் கொள்ளை குறித்து தமிழக அரசின் போக்குவரத்துத்துறை கண்டும் காணாமல் இருப்பது ஏன் ?

கொள்ளை லாபம்
பண்டிகை காலங்களில் வெளியூர் பயணம் மேற்கொள்பவர்கள் இத்தகைய கட்டணத்தை செலுத்த வேண்டிய நிர்ப்பந்தமான சூழ்நிலையை, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் பயன்படுத்தி கொள்ளை லாபம் அடித்து வருகிறார்கள். இத்தகைய கொள்ளை லாபத்தை தடுத்து நிறுத்த வேண்டிய அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதன் பின்னணி என்ன ?

நன்கொடை
தமிழகத்தைப் பொறுத்தவரை ஆம்னி பேருந்துகள் எந்தவித கட்டுப்பாடோ, ஒழுங்குமுறையோ இல்லாமல் தன்னிச்சையாக தங்களது விருப்பம் போல் பேருந்துகளை இயக்கி வருகிறார்கள். இதற்கு காரணம் அ.தி.மு.க. ஆட்சியாளர்களின் ஒத்துழைப்பு தான். இத்தகைய ஒத்துழைப்பிற்காக தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் ஒரு பெரும் தொகையை நன்கொடையாக ஆளுங்கட்சிக்கு வழங்குவதாக கூறப்படுகிறது.

தடுத்து நிறுத்தவும்
தனியார் ஆம்னி பேருந்துகளை பயன்படுத்தும் பொதுமக்களின் நலனில் தமிழக ஆட்சியாளர்களுக்கு அக்கறை இருக்குமேயானால், உடனடியாக ஆம்னி பேருந்துகளின் பகிரங்க கட்டணக் கொள்ளையை உடனடியாக தடுத்து நிறுத்துகிற வகையில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்.












Click it and Unblock the Notifications