கூட்டாட்சி தத்துவத்தை குழி தோண்டி புதைக்கும் மத்திய அரசு.. கே.எஸ்.அழகிரி கண்டனம்
சென்னை: ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை என்ற திட்டத்தின் மூலம் கூட்டாட்சி தத்துவத்தை குழி தோண்டி புதைக்கும் செயலில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

அதிகார குவியலை நோக்கி ஒற்றை ஆட்சிமுறையை அமல்படுத்த மத்திய பாஜக அரசு பல்வேறு உத்திகளை கையாண்டு வருவதாக தெரிவித்திருக்கிறார். ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டம் மாநில உரிமைகளை பறிக்கும் நடவடிக்கை என்றும், அதற்கு தமிழக அரசு துணை போவதாகவும் புகார் கூறியிருக்கிறார்.
தமிழகத்தில் பொதுவிநியோக கட்டமைப்பை சீர்குலைக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு தமிழக அரசு ஆதரவளித்திருப்பது கண்டனத்திற்குரியது எனத் தெரிவித்துள்ளார். மேலும், ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டம் பல்வேறு நடைமுறைச் சிக்கல்களை உருவாக்கும் எனக் கூறியுள்ளார்.
மாநிலங்களின் உரிமைகளை பறித்து ஒடுக்குவதற்கு பிரதமர் மோடி மக்கள் விரோத திட்டங்களை கொண்டு வருவதாகவும், இதற்கு அதிமுக அரசு ஒத்துப்போவது கண்டனத்திற்குரியது என சாடியுள்ளார்.
ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டத்தில் இருந்து தமிழக அரசு விலக வேண்டும் என்றும், அவ்வாறு விலக துணிவில்லாமல் கூட்டாட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டால் தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாபெரும் மக்கள் இயக்கம் நடத்த வேண்டிய நிலை ஏற்படும் எனவும் கே.எஸ்.அழகிரி எச்சரித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications