அண்ணாமலை நீங்க உருண்டு புரண்டாலும்.. பாஜக மீதான வெறுப்பு தமிழகத்தில் குறையாது.. காங்கிரஸ் சுளீர்!
சென்னை: அண்ணாமலை பாதயாத்திரை சென்றாலும் சரி, கன்னியாகுமரியிலிருந்து உருண்டு உருண்டே சென்னைக்கு வந்தாலும் சரி பாஜக மீதான வெறுப்பு தமிழகத்தில் குறையாது என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
Recommended Video
திமுக அரசை பற்றி பேச அண்ணாமலைக்கு என்ன தகுதியிருக்கிறது என அவர் சீறியுள்ளார்.
கூட்டணிக் கட்சியான திமுகவுக்கு துணை நிற்கும் வகையில் அண்ணாமலையை சாடி கே.எஸ்.அழகிரி விடுத்த பதிவின் விவரம் வருமாறு;

பாஜகவை வளர்க்க
தமிழகத்தில் எப்பாடுபட்டாவது பா.ஜ.க.வை வளர்க்க வேண்டுமென்று அண்ணாமலை அதிரடி போராட்டங்களை அடிக்கடி நடத்தி வருகிறார். தமிழக பா.ஜ.க.வை அனைத்து தேர்தல்களிலும் முற்றிலும் நிராகரித்து வருகிறார்கள் தமிழக மக்கள். இதன்மூலம் தமிழகத்தில் பா.ஜ.க.வின் எதிர்காலம் மிகப்பெரிய கேள்விக்குறியாக மாறிவிட்டது. இந்நிலையில், டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் தி.மு.க. வழங்கிய 505 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் கன்னியாகுமரியிலிருந்து சென்னை வரை பாத யாத்திரை நடத்தப்படும் என்று நேற்று நடைபெற்ற உண்ணாநிலை போராட்டத்தில் அண்ணாமலை அறிவித்திருக்கிறார்.

என்ன தகுதி?
இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக திகழ்கிற வகையில் நாள்தோறும் சாதனை பட்டியல்களை படைத்து வருகிறது திமுக அரசு. தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றுவதை லட்சியமாகக் கொண்டு மக்கள் நலன் சார்ந்த நல்லாட்சி வழங்கி வருகிற மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்துவதற்கு பா.ஜ.க.விற்கு என்ன தகுதி இருக்கிறது ?

2 லட்சம் பேருக்கு
நேற்று நடைபெற்ற பா.ஜ.க. போராட்டத்தில் 2 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு தருவதாக தி.மு.க. கூறி 15 மாதங்களில் எந்த வேலை வாய்ப்பையும் ஏற்படுத்தவில்லை என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்து காழ்ப்புணர்ச்சியோடு அண்ணாமலை பேசியிருக்கிறார். கடந்த ஓராண்டு காலத்தில் பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் செய்து கொள்ளப்பட்ட 124 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 1 லட்சத்து 90 ஆயிரம் பேர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பாத யாத்திரை
2014 தேர்தல் பரப்புரையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்குவேன் என்று பிரதமர் மோடி வாக்குறுதி வழங்கினார். ஆனால், 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையில்லா திண்டாட்டம் தற்போது தலைவிரித்தாடி வருகிறது.
தி.மு.க. நிறைவேற்றாத கோரிக்கைகளுக்காக கன்னியாகுமரியிலிருந்து கோபாலபுரத்திற்கு பாத யாத்திரை நடத்தப் போவதாக அண்ணாமலை கூறுகிறார்

வெறுப்பு குறையாது
அண்ணாமலை பாத யாத்திரை நடத்தினாலோ, அல்லது கன்னியாகுமரியிலிருந்து உருண்டு, உருண்டு கோபாலபுரம் வந்தாலும் தமிழகத்தில் பா.ஜ.க. மீது மக்களுக்கு இருக்கிற வெறுப்பு கடுகளவும் குறையாது. எனவே, தமிழகத்தில் மக்கள் பிரச்சினைகளுக்காக போராட்டம் நடத்துகிறோம் என்று கூறி இரட்டை வேடம் போடுவதை தமிழக பா.ஜ.க. நிறுத்திக் கொள்ள வேண்டும்.












Click it and Unblock the Notifications