சொந்த கிராமத்தில் தங்கியிருக்கும் கே.எஸ்.அழகிரி... வேண்டிய நிர்வாகிகளிடம் மட்டும் பேசுவதாக புகார்
சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கொரோனா ஊரடங்கின் காரணமாக சொந்த கிராமத்தில் தங்கியுள்ள நிலையில், அலுவல் ரீதியான கட்சிப்பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள கீரப்பாளையம் தான் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியின் சொந்த ஊர் ஆகும். இங்கு தான் அவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது முதல் சொந்த கிராமத்தில் தான் தங்கி வருகிறார் கே.எஸ்.அழகிரி.
சுமார் இரண்டு மாதங்களுக்கு மேலாக அவர் ஊரில் இருந்து வருவதால் கட்சியின் அலுவல் பணிகளில் சுணக்கம் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், இந்த இரண்டு மாதங்களில் ஓரிரு முறை மட்டும் அவர் சென்னை வந்து சென்றதாகவும், காங்கிரஸ் மற்றும் திமுக சார்பில் அறிவிக்கப்பட்ட போராட்டங்கள் எல்லாவற்றையும் ஊரில் இருந்தவாறே அவர் பங்கேற்றார் எனவும் கூறப்படுகிறது.
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்களில் கூட, சென்னையில் வசிக்கக்கூடிய தங்கபாலு, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போன்றோர் தான் கலந்துகொண்டனர். இதனிடையே கட்சியில் அமைப்பு ரீதியாக மாற்றம் செய்ய வேண்டிய பணிகளும் அப்படியே தேங்கி கிடப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக நம்மிடம் பேசிய காங்கிரஸ் நிர்வாகி ஒருவர், ''தலைவர் அழகிரி ஊரில் இருப்பது இப்போது பிரச்சனையில்லை. திமுக தலைவர் வீடியோ கால் மூலம் தனது கட்சிக்காரர்களிடம் பேசி அவர்களை ஊக்கப்படுத்துகிறார். ஆனால், எங்கள் தலைவர் அவருக்கு வேண்டிய ஒரு சிலரிடம் மட்டும் பேசுகிறார்'' என்றார்.
மக்களை இளிச்சவாயர்களாகப் பார்க்கிறது மத்திய அரசு... வேல்முருகன் விமர்சனம்
இது தொடர்பாக சத்தியமூர்த்தி பவன் வட்டாரத்தில் கேட்ட போது, தலைவர் ஊரில் இருந்தாலும் நாள் தவறாமல் அலுவலகத்தையும், அனைத்து நிர்வாகிகளையும் தொடர்பு கொண்டு பேசி வருகிறார் என்றும், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் ஐடி விங்கிற்கு அண்மையில் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டதை போல், மகளிரணி மற்றும் சில மாவட்ட நிர்வாக அமைப்பிலும் புதிய நியமனங்கள் விரைவில் இருக்கும் எனக் கூறப்பட்டது.