''பட்டியலின மக்களின் ஒரே பாதுகாவலர் ஸ்டாலின்''! தமிழக காங்கிரஸ் கமிட்டியிலிருந்து ஒலித்த குரல்!
சென்னை: பட்டியலின மக்களின் ஒரே பாதுகாவலர் முதலமைச்சர் ஸ்டாலின் தான் என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் எஸ்.சி.துறை தலைவர் ரஞ்சன் குமார் தெரிவித்துள்ளார்.
ஆதி திராவிடர் மாணவர்கள் விடுதிக்கு உணவு உதவித் தொகை உயர்த்தி வழங்கியதற்காக முதல்வருக்கு நன்றி தெரிவித்து அவர் கூறியிருப்பதாவது;

தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்காக விடுதிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் மாதந்தோறும் கல்லூரி மாணவர்களுக்கு தலா ரூ.1,100, பள்ளி மாணவர்களுக்கு தலா ரூ.1000 வீதம் உணவு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிதியை வைத்து தான், மாணவர்களுக்கான உணவுப் பொருட்களை விடுதி காப்பாளர்கள் வாங்கி வருகின்றனர். இந்த நிலையில், அரசுப் பள்ளி விடுதி மாணவர்களுக்கான உணவு உதவித் தொகை ரூ.1000 லிருந்து ரூ.1400ஆகவும், அரசு கல்லூரி விடுதி மாணவர்களுக்கான உணவு உதவித் தொகை ரூ.1100 லிருந்து ரூ.1500ஆகவும் உயர்த்தி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
ஆதிதிராவிடர் மாணவர்கள் நல்ல ஊட்டச்சத்தை பெற்று கல்வி கற்பதில் சிறந்து விளங்க இந்த உதவித் தொகை உயர்வு நிச்சயம் உதவியாக இருக்கும். பட்டியலின மக்களின் ஒரே பாதுகாவலராக முதலமைச்சர் ஸ்டாலின் திகழ்கிறார் என்பதற்கு பல சான்றுகள் உள்ளன. பட்டியலின மக்களுக்கு உரிய இட ஒதுக்கீடு சலுகைகளை, கிறிஸ்தவ மதங்களுக்கு மாறிய ஆதி திராவிடர்களுக்கும் வழங்க உரிய சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ள வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வந்தார்.

மனிதர்கள் தாங்கள் விரும்பும் மதத்தைப் பின்பற்ற உரிமை உண்டு. ஆனால் ஜாதி என்பது மாறுதலுக்கு உட்பட்டது அல்ல. ஜாதி ஏற்றத்தாழ்வை வைத்து எந்த வகையில் அடக்கி ஒடுக்கினார்களோ, அதே ஜாதியை வைத்தே இடஒதுக்கீடு வழங்கி உயர்வடைய வைக்கும் தத்துவம்தான் சமூகநீதித் தத்துவம். ஆதிதிராவிடர்களாக இருந்து மதம் மாறிய பின்னரும் தீண்டாமை கொடுமை தொடர்கிறது. சமூகநீதி தத்துவத்தை அனைத்து வகையிலும் பின்பற்ற வேண்டும் என்பதே திராவிட மாடல் அரசின் நோக்கம் என்று சட்டப்பேரவையில் தெரிவித்தார். கிறிஸ்தவர்களாக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கும், சமூகநீதி உரிமைகள் தரப்பட வேண்டும் என்பதில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் உறுதியாக உள்ளார்.
'தமிழ்நாடு ஆதி திராவிடர் - பழங்குடியினர் நல ஆணையம்' என்கிற புதிய அமைப்பு ஒன்றைத் தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்படும் வகையில் உருவாக்கச் சட்டம் இயற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொண்டதையும் நினைவு கூற கடமைப்பட்டிருக்கிறோம். இந்நிலையில் தற்போது ஆதி திராவிட மாணவர்களின் விடுதி தொகையை உயர்த்திய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி. துறை சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.












Click it and Unblock the Notifications