மாதம் 1000 ரூபாய் .. அக்கவுண்டிலேயே விழப்போகுது.. மாணவர்களுக்கு தமிழக அரசு குட்நியூஸ்
சென்னை : அரசுப் பள்ளிகளில் 2024-25ம் கல்வியாண்டில் 10ம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கான "தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு வரும் ஜனவரி 25ம் தேதி நடைபெற உள்ளது/ இத்தேர்வில் நடைமுறையில் உள்ள இடஒதுக்கீட்டின் அடிப்படையில் 1000 மாணாக்கர்கள் (500 மாணவர்கள், 500 மாணவியர்கள்) தேர்வு செய்யப்பட்டு உதவித்தொகையாக மாதம் ₹1000 வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
10ம் வகுப்பு மாணவர்கள் இந்த திட்டத்தில் பயன்பெறுவதற்கு http://dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தினை நவம்பர்30 முதல் டிசம்பர் 9 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை டிசம்பர் 9ம் தேதிக்குள், மாணவர்கள் பயிலும் பள்ளித் தலைமையாசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பள்ளி கல்வித்துறை இயக்குனர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அரசுப் பள்ளிகளில் 2024-2025 ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணாக்கர்ளுக்கான தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு 25.01.2025 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது.

தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் 2024-2025 ஆம் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணாக்கர்கள் இத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். இத்தேர்வில் நடைமுறையில் உள்ள இடஒதுக்கீட்டின் அடிப்படையில் 1000 மாணாக்கர்கள் (500மாணவர்கள் + 500 மாணவியர்கள்) தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு உதவித்தொகையாக ஒரு கல்வியாண்டில் ரூ.10,000/-(ஒரு மாதத்திற்கு ரூ.1000/- என) வழங்கப்படும்.
தமிழ்நாடு அரசின் 9 மற்றும் 10-ஆம் வகுப்புகளில் கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் உள்ள பாடத்திட்டங்களின் அடிப்படையில் கொள்குறிவகையில் தேர்வு இருதாள்களாக நடத்தப்பெறும். முதல் தாளில் கணிதம் தொடர்புடைய வினாக்கள் 60 இடம் பெறும். இரண்டாம் தாளில் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தொடர்புடைய வினாக்கள் 60 இடம் பெறும். முதல் தாள் காலை 10.00மணி முதல் 12.00 மணி வரையிலும் இரண்டாம் தாள் பிற்பகல் 2.00 மணி முதல் 4.00 வரையிலும் நடைபெறும்.

மாணவர்கள் இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பப் படிவத்தினை 30.11.2024 முதல் 09.12.2024 வரை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணம் ரூ.50/- (ரூபாய் ஐம்பது மட்டும்) சேர்த்து 09.12.2024 -க்குள் மாணவர்கள் பயிலும் பள்ளித் தலைமையாசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும்" இவ்வாறு கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications