இனி ஒவ்வொரு ஆண்டும் உயரும் மின் கட்டணம்? ஆண்டுதோறும் 6% வரை உயர்த்த அனுமதி! பரபர தகவல்
சென்னை: ஆண்டுதோறும் 6% வரை மின் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள மின் பகிர்மான கழகத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த எட்டு ஆண்டுகளாகவே மின்சார கட்டணங்கள் எதுவும் உயர்த்தப்படாமலேயே இருந்தது. இதனால் தமிழ்நாடு மின்வாரியத்தின் கடனும் பல மடங்கு அதிகரித்தது.
இந்தச் சூழலில் தான் தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூலை மாதம் அறிவித்து இருந்தார்.

அமைச்சர்
கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாடு மின்சாரத்துறையில் கடன் பல மடங்கு அதிகரித்து விட்டதாகவும் மின் கட்டணங்களில் மாற்றம் கொண்டு வர மத்திய அரசு 28 முறை கடிதம் அனுப்பியதன் காரணமாகவே மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி குறிப்பிட்டு இருந்தார். இந்த புதிய மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது. இதன் மூலம் 8 ஆண்டுகளுக்குப் பின் தமிழகத்தின் மின் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது.

மின் கட்டணம்
முதல் 100 யூனிட் மின்சாரம் வழக்கம் போலத் தொடர்ந்து இலவசமாகவே வழங்கப்படும். அதன் பின்னர், 101 யூனிட் முதல் 200 யூனிட் வரை பயன்பாட்டிற்கு ரூ.27.50 கூடுதலாகவும், 300 யூனிட் வரை பயன்பாட்டிற்குக் கட்டணம் ரூ.72.50 கூடுதலாகவும் 400 யூனிட் வரையிலான பயன்பாட்டிற்கு ரூ.147.50 கூடுதலாகவும் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. மேலும், 500 யூனிட்கள் வரை மின்சாரம் பயன்படுத்துவோருக்கு ரூ.297.50 வரை கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும்
இந்த மின் கட்டண உயர்வே சுமையை ஏற்படுத்துவதாகப் பொதுமக்கள் புகார் கூறி வருகின்றனர். இந்தச் சூழலில் ஆண்டுதோறும் 6% மின் கட்டணத்தை உயர்த்த தமிழக மின் பகிர்மான கழகத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது மின் கட்டணத்தை உயர்த்த அனுமதி கோரிய விண்ணப்பத்தில் இந்த ஆண்டிற்கான மின் கட்டணம் தொடர்பான கோரிக்கையை மட்டும் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் முன்வைக்கவில்லை.

அனுமதி
ஒவ்வொரு ஆண்டும் 6% வரை அல்லது பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டு அதற்கேற்ப மின் கட்டணத்தை உயர்த்த அனுமதி அளிக்க வேண்டும் என்று அதில் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. தமிழ்நாடு மின்துறைக்குக் கடன் மிக அதிகமாக உள்ள நிலையில், பராமரிப்பு உள்ளிட்ட அனைத்து கட்டணங்களும் அதிகரித்து உள்ளது. கடன் மிக அதிகமாக உள்ளதால், வெளிச்சந்தையிலும் கடன் வாங்க முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது.

ஜூலை 1
இதன் காரணமாகவே ஒவ்வொரு ஆண்டும் 6% வரை மின் கட்டணத்தை உயர்த்த தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் அனுமதி கோரி இருந்த நிலையில், அதற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி ஆண்டுதோறும் ஜூலை 1ஆம் தேதி மின் கட்டணத்தை உயர்த்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications