அரசு வேலையில் சேர விரும்புவோருக்கு அற்புதமான செய்தி.. விரைவில் டிஎன்பிஎஸ்சி மூலம் 50000 பேர் தேர்வு
சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக அடுத்த இரண்டு ஆண்டுகளில் 50 ஆயிரம் புதிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழக அரசு பணியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பல லட்சம் காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இவற்றை நிரப்ப வேண்டும் என்று கோரிக்கை நீண்ட காலமாக அரசு ஊழியர்கள் தரப்பிலும் பொதுமக்கள் தரப்பிலும் வைக்கப்பட்டு வருகிறது கடந்த 3 ஆண்டுகளில் பெரிய அளவில் அரசு பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை மிக குறைவு ஆகும். அண்மையில் நடந்து முடிந்த குரூப் 2, 2ஏ தேர்வுகளின் மூலம் 5,860 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதேபோல் குரூப் 4 பணியிடங்களை பொறுத்தவரை சுமார் 10000 பணியிடங்கள் நிரப்பப்பட்டன.

இந்நிலையில் சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், 1,598 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். அப்போது, அடுத்த 2 ஆண்டுகளில் 50 ஆயிரம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று உறுதி அளித்தார்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் கூறுகையில், "தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட இளைஞர்களுக்கு பணி ஆணை வழங்கி உள்ளோம். திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வந்தது முதலாகவே, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகமாக உருவாக்கிக் கொண்டு செயல்பட்டு வருகிறது. அண்மையில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலமாக, பல்வேறு புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து இது வரை 60 ஆயிரத்து 567 இளைஞர்களுக்கு அரசு பணி நியமனங்கள் வழங்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட பல்வேறு அரசு தேர்வாணைய முகமைகள் மூலமாக 27 ஆயிரத்து 858 பணியிடங்களுக்கு பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.. அடுத்த 2 ஆண்டுகளில், மேலும் 50 ஆயிரம் புதிய பணியிடங்கள் நிரப்பப்படும் என்று மகிழ்ச்சியோடு நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் 10 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக தான், இன்றைக்கு (நேற்று) 1,598 பணியிடங்களுக்கு தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கி உள்ளோம். பணி நியமனம் பெற்றுள்ளவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.அரசு பணி நியமன ஆணைகளை பெற்றுள்ள இளைஞர்கள், உங்களை நாடி வரும் பொதுமக்களுக்கு, அரசின் சட்ட வரையறைக்கு உட்பட்டு அவர்களின் குறைகளை களைய முழு ஈடுபாட்டுடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் பணியாற்ற வேண்டும்" இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
இதனிடையே கடந்த ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை படி, குரூப் 1, குரூப்-2, குரூப்-4 உள்பட 19 போட்டித்தேர்வுகள் மூலம் பணியிடங்கள் வரும் ஆண்டில் நிரப்பப்பட உள்ளது. முதலில் குரூப் 4 பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறுகிறது. ஜூன் மாதம் நடத்தப்பட உள்ள குரூப் 4 தேர்வின் மூலம் மொத்தமாக 6,244 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. , 108 விஏஓ பணியிடங்கள், 2,442 இளநிலை உதவியாளர் பணியிடங்கள், சுமார் 1,700 தட்டச்சர் பணியிடங்கள் மற்றும் வனக்காவலர் பணியிடங்கள் இடம் பெற்றுள்ளன.
இதேபோல் வன காப்பாளர் தேர்வுக்கான (1,264 காலியிடங்கள்) அறிவிப்பு மார்ச் மாதம் வெளியிட்டு, ஜுன் மாதம் தேர்வு நடத்தப்பட உள்ளது. குரூப்-1 தேர்வுக்கான (65 காலியிடம்) அறிவிப்பு மார்ச் மாதம் வெளியிடப்பட்டு ஜூலை மாதத்தில் முதல்நிலைத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குரூப்-2, குரூப்-2ஏ தேர்வுக்கான (1,294 காலியிடம்) அறிவிப்பு மே மாதம் வெளியிட்டு, அதற்கான முதல்நிலைத் தேர்வு ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என தேர்வு கால அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications