டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு- இடைத்தரகர் ஜெயக்குமார் கோர்ட்டில் கதறல்- 7 நாட்கள் போலீஸ் காவல்
சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய (டி.என்.பி.எஸ்.சி) முறைகேடுகளில் இடைத்தரகராக செயல்பட்ட ஜெயக்குமாரை 7 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க சென்னை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுகளில் ராமேஸ்வரம், கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதியவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டது அம்பலமானது. இது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதேபோல் குரூப் -2A தேர்வில் 42 பேரும் முறைகேடு செய்ததாக சிக்கினர். இவ்வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து அடுத்தடுத்து கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை இவ்வழக்குகளில் 32 பேர் சிக்கியுள்ளனர்.
தற்போது டி.என்.பி.எஸ்.சி. அதிகாரி ஓம்காந்தனை காவலில் எடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் போலீசாரால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட இடைத்தரகர் ஜெயக்குமார் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை சென்னை புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டது சைதாப்பேட்டை நீதிமன்றம்.
இதனையடுத்து இன்று சென்னை எழும்பூர் சிபிசிஐடி நீதிமன்றத்தில் ஜெயக்குமார் ஆஜர்படுத்தபப்ட்டார். அப்போது தம் மீது பொய்வழக்கு போடப்பட்டுள்ளது என கதறினார் ஜெயக்குமார். அதேநேரத்தில் ஜெயக்குமாரை 10 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் அனுமதி கோரினர்.
இதனடிப்படையில் ஜெயக்குமாரை வரும் 13-ந் தேதி வரை 7 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கி நீதிபதி நாகராஜன் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications